#dailyElectronics

2025-04-30

ஒன்று மட்டும் தான்… | அறிவியல் புனைவு கதை | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 50 |

அன்றைய தினம் இரவு 9:30 மணிக்கு, குடும்பங்கள் அனைத்தும் டிவி திரைக்கு முன்பு காத்துக் கிடந்தது. கார், ரயில் என பயணத்தில் இருந்தவர்கள் கூட தங்கள் மொபைல் ஃபோன்களை ஆன் செய்து வைத்துக் கொண்டு, அந்த நிகழ்ச்சியை காண ஆவலாக காத்திருந்தனர். ஒரு நபர், அந்த ஒரே நபர்!!!! அப்பப்பா அவருக்குள் அவ்வளவு திறமையா? ஒரு நபர் தன்னுடைய புத்தகத்தின் மூலம், உணர்வற்று அலைந்து கொண்டிருந்த உலகிற்கு வெளிச்சத்தை பாய்ச்சி விட முடியுமா?

என்னப்பா இப்படி கேட்டு விட்டாய்! வரலாறு கூறும் புத்தகங்கள் தான், வரலாற்றின் அடுத்தடுத்த பக்கங்களுக்கு அச்சரம் போட்டது என காலம் காலமாக அறிந்து வந்தது தானே! ஆனால், தொழில்நுட்பம் இந்த அளவிற்கு வளர்ந்து விட்ட காலத்திலும் கூட, போயும் போயும் ஒரு புத்தகத்திற்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகுமா?

சரி எப்படியோ எழுதி இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்துவிட்டார். புத்தகம் எழுதியும், ஒரு வருடம் கடந்து விட்டது. ஆனால், ஒரு கோடி பிரதிகளை கடந்து விட்ட போதும், அந்த புத்தகத்தை எழுதிய புண்ணியவான் முகத்தை இன்னும் ஒருத்தரும் பார்க்கவில்லை. என்னடா இது புது பிரச்சனையாக இருக்கிறது. பெயரைக் கேட்டால், 01001000 01101101 01100011 01101100 01101100 00100001 என ஏதோ பைனரி(சங்கேத) எழுத்தில் எழுதி வைத்திருக்கிறார். அதை எப்படி decode செய்து பார்த்தாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. சரி, புத்தகத்தையாவது ஒரு மொழியில் எழுதி தொலைத்தாரா? கேட்டால் உலகத்திற்கே புரியும் மொழி என்று, சங்கேத மொழியிலேயே சங்கீதம் வாசித்திருக்கிறார்.

அதையும், மக்கள் மொழிகளில் மொழிபெயர்ப்பதற்கு ஒரு ஓபன் சோர்ஸ் கூட்டம் வேறு. அதுவும் புத்தகத்தை போட்டதும் போட்டார். கட்டற்ற உரிமையோடு போட்டுவிட்டார். பிரின்டிங் மிஷின் இருந்தவர் எல்லாரும், புத்தகம் வெளியிடத் தொடங்கி விட்டார்கள். கம்ப்யூட்டர், மொபைலில் படித்தது போதாது என்று, பிரதி எடுத்து வீட்டில் பொக்கிஷமாக பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்படியானால், ஒரு கோடி பிரதிகள் தான் வெளியாகி இருக்கிறது என பத்திரிக்கையில் வந்து செய்திகள் பொய்யா? இல்லை இல்லை தற்போது வரை அங்கீகரிக்கப்பட்ட வெளியீட்டாளர்கள் வெளியிட்ட என் தான் ஒரு கோடியை கடந்து இருக்கிறது. அந்த நபர் கதைகள் எழுதவில்லை. கவிதைகள் பாடவில்லை. தத்துவத்தை விளக்கவில்லை. எதார்த்தம் என்கிற பெயரில், இருக்கின்ற ஒன்றை, இதுவரை நாம் காணாத பாணியில் அனைவரும் அறிய செய்து விட்டார்.

என சிறப்பு விருந்தினருக்கு விளக்கம் கொடுத்து முடித்துவிட்டு, நெறியாளர் கான்பிரன்ஸில் இணைந்திருந்த,  மர்ம எழுத்தாளரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார். மெலிந்த தேகம், கூர்மையற்ற பார்வை, கோபமற்ற முக வடிவம், கண்ணீரும் வறண்டு போன கண்கள், சுருண்டும் சுருளாமலும் அரைகுறையாய் காய்ந்திருக்கும் சிகை. ஆங்காங்கே கரை தெரியும் தொள தொள வெள்ளை சட்டையில், அளவுக்கு அதிகமான அளவிலிருந்த பாக்கெட்டில் ஒரு பழைய பேனா மட்டும் சொருகி இருந்தது.

“யோவ் உனக்கே இது நியாயமா இருக்கா? ஊருக்கே முகத்தை காட்டப் போவதாக சொல்லிவிட்டு, ஏண்டா மாஸ்க் போட்டு மூடி இருக்கிற?”என புலம்பும் குரல்கள், வீதி எங்கும் நிறைந்திருந்தன. சலனங்கள் ஏதும் இன்றி, அந்த நபரின் மெல்லிய  குரல் காற்றை வந்து சேர்ந்தது. அனைத்து நாடுகளிலும் இருக்கக்கூடிய தொலைக்காட்சிகள், செய்யறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்த!, மர்ம நபரின் பேச்சை தாய் மொழிக்கு தாரை வார்த்தன.

அந்த நபரின் பேச்சு உங்களுக்காக,

“நிறைவாய் நிறைந்திருக்கும் மக்களே! போயும் போயும் நான் எழுதியதெல்லாம் படித்திருக்கும் உங்களை நினைத்தால் எனக்கு சிரிப்பு தான் வருகிறது. என்னவோ யதார்த்தத்தை சொல்லிவிட்டேனாம். நான் யார்? என்று தெரிந்து கொள்ள வேண்டுமாம். உங்களுக்கெல்லாம் வேற வேலை இல்லையா?, போய் ஏதாவது உருப்படியாக இருந்தால் பாருங்கள்.”

உடனே குறுக்கிட்ட நெறியாளர்,”சார் சார் ரொம்ப கஷ்டப்பட்டு, உங்களை வீடியோ கான்பரன்ஸ் என்று அழைத்து இருக்கிறோம். இப்படி பாதியில் ஓடிப் போனால் என்ன அர்த்தம். ஸ்பான்சர்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?”

“சரி உங்களுக்கு என்ன தான் தெரிந்து கொள்ள வேண்டும்?, என்னை பற்றி தானே?”

“ஆமா சார்! ஆமா”

“ஒன்று சொல்லட்டுமா? நான் என்று ஒன்று இல்லவே இல்லை.”

“என்ன சார் சொல்றீங்க?”என நெறியாளர் தலையை சொறிந்து கொண்டார்.

“சொல்கிறேன். இதோ உங்கள் கண் முன்னால், நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து இருப்பதாக உங்களுக்கு தோன்றுகிறது அல்லவா?, உண்மையில் இது நாற்காலியே இல்லை. நீங்கள் ஏதோ ஒரு இடத்தில் இருந்து கொண்டு, ஏதோ ஒரு திரையின் ஊடாக இந்த காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் பயன்படுத்தும் திரை தொடுதிரையாகவும் இருக்கலாம். சாதாரண திரையாகவும் இருக்கலாம். கோடிக்கணக்கான LED விளக்குகளின் கோர்வை தான், நீங்கள் பயன்படுத்தும் திரையாக இருக்கலாம். சரி எந்த வகை திரையாக இருந்தாலும்,அந்தத் திரையில் என் உருவம், உங்கள் முன்னால் வீற்றிருக்கிறது. நான் பேசும் குரலோ, உங்கள் திரைக்குப் பின்னால் பயன்படுத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியின் மூலம், மின்னோட்ட அலைகளிலிருந்து செவியுணர் அலைகளாக மாற்றப்படுகிறது.

ஒருவேளை, நான் இறந்து போய் இருநூறு ஆண்டுகள் கூட ஆகி இருக்கலாம். ஆனாலும் நான் பேசுவதை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். காரணம், நான் எனும் இந்த உருவம் ஒரு சேமிப்பு தகட்டுக்குள் சேமிக்கப்பட்டு இருக்கிறது. ஆகையால்,திரும்பத் திரும்ப  உங்களால் என்னை பார்க்க முடிகிறது.

ஒருவேளை நாம் உண்மையிலேயே நேரலையில் சந்தித்து இருந்தாலும், ஏதோ ஒரு இடத்தில் இருக்கும் இணைய இணைப்பின் மூலம், என்னுடைய காணும் ஒளியானது,  என் கணினியில் இருக்கும் கேமரா கண்களின் மூலம் உணரப்பட்டு, அதன் சில்லுவின் மூலம், சங்கேத குறியீடுகளாக(binary codes)மாற்றப்பட்டு, என் மொபைல் கருவி அலைகளாய் கடன் கொடுத்த இணைய இணைப்பின் உதவியோடு(Hotspot), கணினியில் இருக்கும் அலை வழங்கின் மூலம்(transmitter) காற்றில்  அலைகளாய் பயணித்து, உங்கள் இல்லத்தின் அருகில் இருக்கும் செல்போன் கோபுரத்தை அடைந்து, அங்கிருந்து ஒளி வடத்தின்(fibre optic cable)உதவியோடு கடல் கடந்து நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் எலக்ட்ரானிக் கருவியை இறுதியாக வந்தடைகிறது.

இத்தோடு தான் முடிந்து போய் விட்டதா? நான் பேசும் ஒலி அலைகளும், மின்னோட்ட அலை,மீண்டும் செவி உணர் ஒலி அலை என பல வடிவம் கண்டு, உங்கள் மூளை நியூரான்களை வந்தடைகிறது. இவை அனைத்தும், நீங்கள் கண்மூடி கண்களுக்கும் வினாடிப் பொழுதின் லட்சத்தின் ஒரு பங்குக்கும் குறைவான நேரத்திற்குள் நடந்து முடிந்து விடுகிறது.ஆனால், இவ்வளவு பெரிய விந்தைக்குப் பின்பும் இருப்பது ஒன்றே!

ஆம் ஒன்று மட்டும்தான். ஒன்று மட்டும் தான்.1 மட்டும்தான்.1 ஒன்று என்றால் உண்டு.0 என்றால் இல்லை. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் கருவி இல்லை என்றால் இல்லை தான். அந்தக் கருவி இருப்பதால்தான் திரையின் ஊடாக நீங்கள் என்னை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இதுதான் தர்க்கவாதத்தின்(logic)அடிப்படை. இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் இரண்டே கோட்பாடுகள் தான். ஒன்று இருக்க வேண்டும் அல்லது இல்லாதிருக்க வேண்டும்.

ஒன்றில் நீங்கள் உயிரோடு இயங்க வேண்டும். அல்லது உயிரற்ற ஜடமாக  இயற்கையோடு கலந்திட வேண்டும். பெரு வெடிப்பு நடந்ததால், பிரபஞ்சம் தோற்றுவிக்கப்பட்டதென நம்புகிறது அறிவியல். ஒருவேளை பெரு வெடிப்பு நடக்கவில்லை என்றால், பிரபஞ்சம் என்றொன்று இருந்திருக்காது. ஆம் எங்கும் இரண்டே வாய்ப்புகள் தான்.

பார்த்துக் கொண்டிருக்கும் அன்பான மக்களே! உங்கள் இல்லத்தில் இருக்கும் மின் விளக்குகளை வினாடிப் பொழுதேனும் அணைத்து விட்டு மீண்டும் போடவும்.

செய்து விட்டீர்களா? ஆம்! இப்போது இந்த பிரபஞ்ச வெளிக்கு நீங்கள் இருக்கிறீர்கள் என சமிக்ஞை அனுப்பி இருக்கிறீர்கள். ஆம், ஒரு வினாடி இல்லை என சொல்லி விளக்கனைத்து பின்பு விளக்கை எரிய விட்டதால், உங்களது இருப்பு மீண்டும் ஒருமுறை உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கற்காலத்தில் குகைகளில் வாழ்ந்த உங்கள் முன்னோரும் கற்களை உரசி கண்டுபிடித்ததற்கு பின்பும், இந்த தர்க்கவாத தத்துவம் தான் நிறைந்து இருக்கிறது. இந்த எலக்ட்ரானிக்ஸ் விந்தையில், இல்லாத நான் இன்று உங்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறேன். யாரடா இவன், பைத்தியக்காரன் போல இவ்வளவு நேரம் உளறுகிறானே என பார்க்கிறீர்களா?” என பேசிக்கொண்டே தான் அணிந்திருந்த முகமூடியை கழற்றினார் அந்த மர்ம நபர்.

“என்னடா இது ஆச்சரியமாக இருக்குது?!”

“நம்ம கரோட்ரோ கிரகத்தில் வாழும் பிரஜைகளின் முகத்தில் நெற்றிக்கு கீழே நீல நிறத்தில் அல்லவா? இருக்கும். என்ன இந்த நபருக்கு வேறு நேரத்தில் இருக்கிறது???”

செல்போன் திரைகளையும் தாண்டி, இந்த சந்தேக குரல்  தெருவீதி எங்கும் பரவியது

“உங்கள் சந்தேகம் சரிதான்” மர்ம நபர் பதிலளிக்க தொடங்கினார். “நான் பூமி எனும் கிரகத்தை சேர்ந்தவன். அது சரி பூமிக்கு என்ன? பிரபஞ்சத்தில் போஸ்ட் கார்டு அட்ரஸ் ஆ இருக்கிறது?” எனச் சொல்லிக் கொண்டே தன்னுடைய திரையில் பிரபஞ்ச வரைபடத்தை திறந்த மர்ம நபர்,” பிரபஞ்சத்தின், இந்த அண்ட கூட்டங்கள் நிறைந்திருக்கும் பகுதியில் தான் எங்களுடைய கிரகம் இருக்கிறது(Laniakea super cluster). உண்மையை சொல்லப் போனால், நீங்கள் இருக்கும் அண்ட கூட்டத்திலிருந்து (Hercules super cluster), நாங்கள் சுமார் 500 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறோம்.”

இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே, இந்த மர்ம நபரை கண்டுபிடிக்க கரோட்ரோ கிரகத்தின், வல்லரசு தேசமான வரோயிய குடியரசின் அதிபர், அதிரடி உத்தரவை பிறப்பித்தார். அவருடைய தேசத்தின் அதிவிரைவு படைகள், மர்ம நபர் தங்கி இருக்கும் இடத்தை கண்டறிந்து, வினாடிப் பொழுதில் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது.

“ஹா ஹா முட்டாள்களா! உங்களை விடவும் மூன்று பில்லியன் வருடங்களுக்கு முன்பே, இந்த ஏவுகணைகள் எல்லாம் நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். என சொல்லிக்கொண்டே, வீடு போல அமைக்கப்பட்டு இருந்த தன்னுடைய விண்கலத்திலிருந்து, ஒளி வேகத்தில் சிட்டெனப் பறந்தான் அந்த மர்ம மனிதன்.”

ஏவுகணையோ காலி மனையை தாக்க, வான பெருவெளி எங்கும் வினாடி பொழுது மின்னலாய் ஒளி கீற்றுகள் பிறந்தது.

ஏவுகணையின் ஓரத்தில் பொருத்தப்பட்டிருந்த டைமர் கடிகாரத்தின் குவாட்ர்ஸ் கற்கள் சிதறி, பக்கத்து மனை காரரின் சோலார் பேனல் மீது பட்டுத்தெரித்தது.

விண்கலத்திற்குள் LED விளக்கை எரிய விட்டபடி, அடுத்த அண்ட பெருவெளியை நோக்கி மர்ம மனிதன் பயணத்தை தொடர்ந்தான்.

                                  – ஸ்ரீ காளீஸ்வரர்.செ

                                                  ——முற்றும்

              

___________________________________________

இந்த எளிய மாணவனுக்கு, எளிய தமிழில் எலக்ட்ரானிக்ஸை கற்றுத் தர வாய்ப்பு அளித்த கணியத்திற்கும் வாசகர்களுக்கும் நன்றி.

விரைவில்….. புதிய நெடுந்தொடரில் சந்திப்போம்………..

தங்கள் மேலான கருத்துக்களுக்கு மின்மடலை தொடர்பு கொள்ளுங்கள்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com

#basicElectronics #dailyElectronics #digitalElectronics #electronics #electronicsStory #sciFiStory #shortStory #story

2025-04-28

ஆல் ரவுண்டர் NAND லாஜிக் கதவு | லாஜிக் கதவுகள் குறுந்தொடர் முற்று | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 49

லாஜிக் கதவுகள் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு கட்டுரைகளில் விவாதித்து வந்திருக்கிறோம். அவற்றின் வகைகள், சிறப்பம்சங்கள் உள்ளிட்ட பிறகு சுவாரசியமான தகவல்களை உங்கள் மத்தியில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் லாஜிக் கதவுகள் குறித்த கடைசி கட்டுரை இதுதான். இந்தக் கட்டுரையில், ஆல் ரவுண்டர் NAND கதவு குறித்துதான் பார்க்கவிருக்கிறோம். ஏற்கனவே, கடந்த கட்டுரையில் ஆல்ரவுண்டர் NOR கதவு குறித்து பார்த்திருந்தோம்

NOT Using NAND

கடந்த கட்டுரையில் பார்த்ததை போலவே, NAND கதவிற்கும் அதனுடைய இரண்டு உள்ளீடுகளையும் சேர்த்து ஒரே உள்ளீடாக மாற்றி விட வேண்டும். இதிலிருந்து கிடைக்கும் வெளியீடானது,NOT கதவின் வெளியீடுக்கு சமமாக இருக்கும்.

AND using NAND

AND கதவின் மறுதலை தான் NAND என அதற்கான கதவுக்கான கட்டுரையிலேயே நான் குறிப்பிட்டிருப்பேன். அப்படிப் பார்த்தால் இப்போது நம்மிடத்தில் NAND இருக்கிறது, அதை ஒன்றிய பகுதியில் பார்த்த NOT USING NAND கதவை பயன்படுத்தி மறுதலை செய்து வெளியீட்டில் AND கதவை பெறலாம்.

OR using NAND

டிமார்கனின் இரண்டாவது விதியைப் படித்து பார்த்தீர்கள் அல்லவா? அதே அடிப்படையில் தான் இங்கே OR using NAND கதவை எளிமையாக கட்டமைத்து இருக்கிறோம். இரண்டு மறு தலைகள் வரும்போது அவை ஒன்றை ஒன்று நீக்கிவிடும் என்பதையும் நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன்.

NOR using NAND

முன்பு நாம் செய்திருந்த, OR கதவோடு ஒரு மறுதலைக்காக NOT கதவை போட்டுவிட்டால் போதும். NOR கதவு தயாராகிவிடும்.

Ex-OR using NAND

இந்த மின் சுற்று உங்களுக்கு சற்றே குழப்பமாக இருப்பது போல தோன்றலாம். ஆனால் கவனமாக பாருங்கள். A,B ஆகிய இரண்டு உள்ளீடுகளும் ஒரு NAND கதவுக்கு வழங்கப்படுகிறது. பின்பு A உள்ளீடானது இரண்டாவது NAND கதவுக்கும், B உள்ளீடானது மூன்றாவது NAND கதவுக்கும் வழங்கப்படுகிறது. முதலாவது கதவின் வெளியீடானது இரண்டு மற்றும் மூன்றாவது கதவுகளுக்கு வழங்கப்படுகிறது.

பின்பு இரண்டு மற்றும் மூன்றாவது கதவுகளின் வெளியிடானது நான்காவது கதவுக்கு உள்ளீடாக வழங்கப்படுகிறது. நான்காவது கதவிலிருந்து கிடைக்கும் வெளியீடானது ,ExOR கதவின் வெளியீடுக்கு எடுத்து சமமாக இருக்கும். இதற்கான கணக்கீடை நான் கீழே கொடுக்கிறேன்.

First gate output = (A.B)’
Second gate input = A(A.B)’
Third gate input = B(A.B)’
Secod gate output = (A(A.B)’)’
Third gate output = (B(A.B)’)’
Fourth gate input = third out + second out
Using demorgens law and simplification
Final output= A’.B + A.B’

அவ்வளவுதான், லாஜிக் கதவுகள் குறுந்தொடர் இனிதே நிறைவடைகிறது.

எளிய எலக்ட்ரானிக்ஸ் தொடரின் நிறைவு கட்டுரையில் சந்திக்கலாம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com

#dailyElectronics #digitalElectronics #electronics #logicGates

2025-04-01

கை கடிகாரத்துக்கு எப்படி உங்கள் இதய துடிப்பு தெரிகிறது? | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 44

மருத்துவத்துறை

முன்பெல்லாம் மருத்துவர் ஸ்டெதஸ்கோப்பை பயன்படுத்தி இதயத்துடிப்பை பரிசோதிப்பார். அக்கால மருத்துவர்கள் கையில் கட்டி இருக்கும் கடிகாரத்தின் ஒவ்வொரு வினாடி நகர்வையும் கவனமாக கவனித்துக் கொண்டே, இதயத்துடிப்பையும் எண்ணிக்கொண்டிருப்பார்கள். இதயத்துடிப்பில் திடீரென ஏற்படும் மாற்றங்களை இவ்வாறு தான் அவர்கள் கண்டறிய வேண்டிய நிலை இருந்தது.

தொடர்ந்து இசிஜி போன்ற தொழில்நுட்பங்களின் வருகைக்குப் பிறகு, சிக்கலான இதய கோளாறுகளையும் எளிமையாக கண்டறியும் நுட்பம் வளரத் தொடங்கியது. இருந்த போதிலும் கூட, அவசர சிகிச்சை வழங்கக்கூடிய மருத்துவமனைகளில் மட்டுமே இது போன்ற கருவிகள் இருந்தன. இன்றளவும் கூட பல்வேறு கிராமப்புற சிறிய மருத்துவ சிகிச்சை நிலையங்களில் இது போன்ற உயர்  நவீன தொழில்நுட்ப கருவிகளை நாம் எதிர்பார்க்க முடியாது.

சிக்கலான இதய கோளாறுகளை சந்தித்து இருப்பவர்களின் இதயத்துடிப்புகளை சரியாக பார்ப்பதற்கு, தற்காலத்தில் விரல்களிலேயே அணிந்து பார்க்கக்கூடிய ஹார்ட் ரேட் சென்ஸார்(heart rate sensor )மற்றும் பல்ஸ் ஆக்சிமிட்டர்கள்(pulse oximeter)வந்துவிட்டன.

ஸ்மார்ட் கை கடிகாரங்கள்

ஆனால், சமீப ஆண்டுகளாக 500 ரூபாய் முதல் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட் கைகடிகாரங்களில் கூட இதயத்துடிப்பை பார்த்துக் கொள்ளும் வசதி இருப்பதாக விளம்பரம் செய்யப்படுகிறது. சிலர் இதெல்லாம் பொய்; வாய்க்கு வந்த இதயத்துடிப்பு மதிப்பை அடித்து விடுகிறது என்று கருதவும் செய்கிறார்கள். ஆனால், இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் தான் என்ன? உண்மையிலேயே கையில் கட்டி இருக்கும் கைகடிகாரத்தால் உங்களுடைய இதயத்துடிப்பை கணிக்க முடியுமா?

உண்மையிலேயே உங்களுடைய கை கடிகாரத்தின் மூலம் இதயத்துடிப்பை கண்டறிய முடியும். உங்களுடைய பொதுவான கைக்கடிகாரங்களை திருப்பி பார்க்கும்போது அதிலிருந்து பச்சை நிற ஒளி(green light usually ranging between 550nm) வெளிப்படுவதை பார்க்க முடியும். அதற்காக சும்மா திருப்பி பார்த்தேன் ஒன்றும் தெரியவில்லை என்று சொல்லிவிடாதீர்கள்.உங்கள் கைகளில் அணிந்து கொண்டு இதயத்துடிப்பை அளப்பதற்கான அமைப்பில் சென்று பார்வையிடுங்கள்.அதிலிருந்து ஒரு பச்சை நிற ஒளி வெளியேறும். எதற்காக பச்சை நிற led விளக்கு கொடுத்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறீர்களா?

பச்சை நிறக் காரணம்

அடிப்படையில் நம்முடைய ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் ஆனது, பச்சை நிற ஒளியை பிரதிபலிக்கக் கூடியது. அதாவது,ஹீமோகுளோபின் மீது பச்சை நிற ஒளிபடும்போது அவற்றை சற்றே உள்வாங்கிக் கொண்டு உடனடியாக வெளிவிட்டு(absorb and releases)விடும். அது ஏன் பச்சை நிற ஒளியை மட்டும் தான் வழங்க வேண்டுமா?? வண்ண வண்ண கலர் களில் லைட் அடித்தால் ஹீமோகுளோபினுக்கு பிடிக்காத என்று கேட்டு விடாதீர்கள். உண்மையை சொல்லப் போனால், சிவப்பு நிற ஒளி மற்றும் நீல நிற ஒளியானது ஹீமோகுளோபினுக்கு மிகவும் பிடிக்கும். இதன் காரணமாக அந்த நிற ஒளிக் கற்றைகளை ஹீமோகுளோபின் ஆனது தனக்குள்ளாக ஈர்த்துக் கொள்ளும்.(அடிப்படையில், ஹீமோகுளோபின் என அறியப்படும் ரத்த சிவப்பு அணுக்களானது சிவப்பு மற்றும் நீல நிறத்தை தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும். மேலும் இந்த நிறங்கள் அதிகமாக சிதறடிக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.)

அதேநேரம், பச்சை நிற ஒளியை பொருத்தமட்டில் ஹீமோகுளோபின் வெளிவிட்டு விடும். ஒருவேளை பச்சை நிற ஒளிக்கு பதிலாக சிவப்பு நிற ஒளியை நாம் வழங்கினால் நம்மால் சரியாக இதயத்துடிப்பை அளவிட முடியாது என்பதுதான் நிதர்சனம். சரி பச்சை நிற ஒளி வெளிப்படுகிறது அதற்குப்பின் என்ன நடக்கும் என்று கேட்கிறீர்களா? அந்த பச்சை நிற ஒளி கற்றைகள் நம்முடைய தோலை துளைத்துக் கொண்டு , நரம்பின் வழியாக சென்று கொண்டிருக்கும் ரத்த செல்களை அடையும். அங்கு இருக்கும் ஹீமோகுளோபின் ஆனது இந்த பச்சை நிற ஒளியை உள்வாங்கும், உள்வாங்கிய உடனேயே வெளிவிட்டு விடும். இத்தகைய வெளிவிடப்படும் ஒளியானது கைக்கடிகாரத்தில் இருக்கும் உணர்வியின்(sensor)மூலம் பெற்றுக் கொள்ளப்படும். இவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்ட ஒளியை பரிசோதித்துப் பார்க்கும் கைக்கடிகாரத்தின் உள்ளார்ந்த மின் சுற்று பகுதியானது(IC), எந்த வேகத்தில் ரத்தம் பாய்கிறது? எந்தெந்த இடங்களில் அதிர்வெண் மாற்றம்(frequency change)தெரிகிறது போன்றவற்றை கண்டறியும். எத்தனை வினாடிகளுக்கு ஒருமுறை அதிர்வெண் மாற்றம் தெரிகிறதோ! அதை அடிப்படையாகக் கொண்டு இதயத்துடிப்பானது கணக்கிடப்படும். உதாரணமாக ஆரோக்கியமான மனித இதயத்துடிப்பு 70 முதல் 80 வரை இருக்கும் என்று சொல்வார்கள்.

அப்படியானால், பத்து வினாடியில் சுமார் 12 முதல் 13 தடவை அதிர்வெண் மாற்றம் தெரிந்திருக்க வேண்டும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் மனித இதயத்துடிப்பானது கணக்கிடப்படுகிறது. ஆனால், இதில் பல்வேறு விதமான சிக்கல்கள் இருக்கிறது.  உங்களுடைய தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டும் மற்றும் உங்களுடைய தோலின் தடிமன் போன்றவற்றாலும் கூட, இந்த இதயத்துடிப்பு அமைப்பானது சரியாக செயல்படாமல் போகலாம். காரணம் இந்த ஒளிக் கற்றைகள் உங்களுடைய தோலுக்குள் ஊரூருவை செல்ல வேண்டும். ஒருவேளை சரியாக ஊடுருவி செல்லவில்லை என்றால், சரியான இதயத்துடிப்பை அறிந்து கொள்ள முடியாது.

மேலும் கைக்கடிகாரத்தை உங்களுடைய கைக்கு ஏற்றார் போல அணிந்து கொள்ள வேண்டும். மிகவும் இறுக்கமாகவோ அல்லது எப்போது வேண்டுமானாலும் கழன்று விழுவது போலவோ அணிந்து கொண்டிருந்தால் சரியான இதயத்துடிப்பை கண்டறியவே முடியாது. மேலும், வெளிப்புற சூழல்களும் கூட இதயத்துடிப்பை தீர்மானிப்பதில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

கைக்கடிகாரம் கட்டி இருக்கும் பகுதியில் அதிகப்படியான வியர்வை துளிகள் இருந்தால் கூட,அதன் மீது ஒளிக்கற்றைகள் பட்டு தாறுமாறாக சிதறடிக்கப்பட்டால், சரியான இதயத்துடிப்பை காண முடியாது(ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவுதான்). மேலும், இதயத்துடிப்பை பார்க்கிறேன் என்கிற பெயரில் அங்குமிங்கும் ஓடி குதித்துக் கொண்டு இதயத்துடிப்பை பார்த்தாலும் பெருவாரியான மாற்றம் தெரியும்.

குறைகள்

இதன் காரணமாகவே, பெரும்பாலான ஸ்மார்ட் கைக்கடிகார நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு கீழ் அல்லது ஒரு குறிப்பிட்ட மதிப்பிற்கு மேல் இதயத்துடிப்பு பதிவு செய்யப்பட்டால், அதை “தவறான மதிப்பு” என காட்டுகிறது. உதாரணமாக, இதயத்துடிப்பு 50 க்கு கீழ் அல்லது 100க்கு மேல் இருந்தால் பெரும்பாலான ஸ்மார்ட் கை கடிகாரங்கள் தவறான இதயத்துடிப்பு என காட்டுவதோடு கைக்கடிகாரத்தை ஒழுங்காக அணியுமாறு அறிவுறுத்துகிறது.

மேலும் தரம் குறைந்த,விலை மலிவான ஸ்மார்ட் கை கடிகாரங்களில் வழங்கப்பட்டிருக்கும் உணர்வியானது, அந்த அளவிற்கு சிறப்பாக செயல்படாது. எனவே, இதனால் கூட இதயத்துடிப்பு மதிப்புகளில் மாற்றம் தெரியலாம்.

சில போலியான ஸ்மார்ட் கை கடிகாரங்களில், உண்மையான இதயத்துடிப்பு அளக்கும் அமைப்புகள் வழங்கப்பட்டு இருப்பதில்லை. இதன் காரணமாக, தனக்கு தோன்றும் ஒரு மதிப்பை கைக்கடிகாரம் காட்டிக் கொண்டே இருக்கும். நீங்கள் கைகடிகாரத்தை கழற்றி, கத்திரிக்காயின் மீது வைத்தால் கூட கத்திரிக்காய்க்கும் இதயம் இருக்கிறது என்று நிரூபித்து விடும் இந்த கடிகாரம்.

இந்த அடிப்படையிலேயே இரத்த அழுத்தம் மற்றும் இரத்த ஆக்சிஜன் அளவு போன்றவை கூட கணக்கிடப்படுகிறது. ஆனால், இந்த இடத்தில் நாம் முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டும். இதுபோன்ற ஸ்மார்ட் கை கடிகாரங்கள் மருத்துவ உபகரணங்கள் அல்ல.

உதாரணமாக, இசிஜி பார்க்கக்கூடிய இயந்திரமானது உடல் முழுவதிலும் இருக்கக்கூடிய முக்கிய நரம்புகளில் மின்காந்த மாற்றங்களை கண்டறியும் வகையிலான அமைப்புகளை வைத்து, நொடிக்கு நொடி துல்லியமாக இதயத்துடிப்பை கண்டறியும். அப்படி கண்டுபிடிக்க கூடிய மருத்துவ உபகரணங்களில் கூட சிறிதளவு பிழைகள் இருக்கலாம் என்று அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அந்த பிழைகள் பெரும்பாலும் மருத்துவ சிகிச்சையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை.

ஆனால், சாதாரண ஒரு கைக்கடிகாரத்தில் காட்டும் இதயத்துடிப்பை மட்டும் வைத்துக்கொண்டு, மருத்துவ சிகிச்சையை வழங்கி விட முடியாது. அதில் துல்லியத்தன்மை சார்ந்த பல்வேறு பிரச்சனைகள் இருக்கும். இருந்த போதிலும் கூட, ஒரு சில விலகி உயர்ந்த ஸ்மார்ட் கை கடிகாரங்கள் இதய கோளாறுகளை கண்டறிந்து மருத்துவர்களுக்கு பெரிதும் உதவி இருப்பதாக அறிந்து கொள்ள முடிந்தது. இதில் உணர்வி அமைப்பாக வழங்கப்பட்டிருப்பது சோலார் பேனல்களில் பயன்படுத்தும் அடிப்படையிலான ஒளி மின் டையோடு தொழில்நுட்பம் தான் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. எனவே, ஒருபோதும் மருத்துவ உபகரணங்களோடு கை கடிகாரத்தில் இருக்கும் இதயத்துடிப்புமானிகளை ஒப்பிட்டு பார்ப்பது சரியாக அமையாது.

மேலும், இதயத்துடிப்பு மானிகளையும் கடந்து,தரம் குறைந்த மற்றும் முறையாக உற்பத்தி செய்யப்படாத ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை அணியும்போது, அதில் இருக்கும் லித்தியம் பேட்டரிகள் வெடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. பிரபலமான நிறுவன தயாரிப்பை போலவே போலியாக தயாரிக்கப்படும் இந்த ஸ்மார்ட் கை கடிகாரங்கள் ,முறையான பாதுகாப்பு விதிமுறைகளை(safety standards)பின்பற்றி இருக்கிறதா? என்று உறுதி செய்வது கடினம்.

எனவே, ஸ்மார்ட் கைக்கடிகாரங்களை வாங்கும் போது முறைப்படியான நிறுவன முத்திரை கொண்ட கடிகாரங்களை வாங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், விளையாட்டாக இதயத்துடிப்பை பார்த்துக் கொள்ள மட்டும் இதன் இதயத்துடிப்பு மானியை பயன்படுத்துங்கள். ஆனால், நிச்சயம் வருங்காலத்தில் வரக்கூடிய கைக்கடிகார இதயத்துடிப்பமானிகள் தற்கால மருத்துவ உபகரணங்களுக்கு சவால் விடும் என்பதில் துளிஅளவு சந்தேகமில்லை.

வளரட்டும் எலக்ட்ரானிக்ஸ்! வளரட்டும் தொழில்நுட்பம் ! .

மீண்டும் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் சந்திக்கலாம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com

#basicElectronics #dailyElectronics #digitalElectronics #electronics #electronicsInTamil #heartRateSensor #smartwatches

2025-03-31

நாம் டைப் செய்வது கணினிக்கு எப்படி தெரிகிறது? | ASCII CODE|லாஜிக் எலக்ட்ரானிக்ஸ் சங்கமம் | எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 43

எனக்குள் பல ஆண்டுகளாக ஒரு சந்தேகம் இருந்தது. தட்டச்சு பொறிகளில் நாம் உள்ளீடை வழங்கும்போது, அந்த உள்ளீடை எப்படி கணினி புரிந்து கொள்ளும் என்று எனக்கு நீண்ட காலமாக நீடித்த ஒரு சந்தேகம் இருந்தது. சிறுவயதில் எல்லாம் தட்டச்சு பொறிக்குள் M என்றால் அதற்குள்ளும் M என்கிற வடிவத்தில் எழுத்து இருக்கும், அந்த M வடிவத்திலேயே மின்சாரம் சென்று அதற்குரிய வெளியீடு கிடைக்கும் என்றெல்லாம் கனவு கண்டு கொண்டு இருந்தேன்.

ஆனால், அதற்கான பதிலை கடந்த கடைசி வார கல்லூரி வகுப்பில் தான் நான் தெரிந்து கொண்டேன். லாஜிக் கதவுகள் தொடர்பாக நாம் பல்வேறு கட்டுரைகளை பார்த்திருக்கிறோம். அடிப்படையில், லாஜிக் கதவுகளில் உள்ளீடுகள் பூஜ்ஜியம்(0) அல்லது ஒன்று(1) என்ற அடிப்படையில் தான் வழங்கப்படும். உண்மையில், லாஜிக் கதவுகளை அடிப்படையாகக் கொண்டுதான் கணினிகளை வடிவமைக்கப்பட்டிருக்கின்றன என்று கூட சொல்லலாம். அந்த வகையில் பார்க்கின்ற பொழுது, கணினிக்கு தெரிந்தது பூஜ்ஜியம் அல்லது ஒன்று மட்டும்தான்.

நீங்கள் சொல்லும் பைத்தான், ஜாவா, சி உள்ளிட்ட எந்த ஒரு மொழியும் கணினிக்கு தெரியாது. தற்கால குவாண்டம் சிப்புகள் வரை அவர்கள் பயன்படுத்துவது பூஜ்ஜியம் அல்லது ஒன்று என்னும் நிலை குறித்து மட்டும்(qubit states)தான்.

அப்படியானால், இந்த பூஜ்ஜியம் ஒன்றை மீண்டும் மீண்டும் போட்டு வைத்து தான் உள்ளீடை வழங்க முடியும். சரி ABCD அகர வரிசைக்கு என ASCII Code(American standard code for  information interchange)எனும் முறை பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் உங்களால் தட்டச்சு பொறியை கொண்டு, கணினிக்கு எண்கள் மற்றும் ஆங்கில எழுத்துக்களை உள்ளீடாக வழங்க முடியும்.

இதற்கான அட்டவணையை நான் வழங்குகிறேன். அந்த அட்டவணையை பாருங்கள்.அதன் பின்பு கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

என்னப்பா அட்டவணை இது! எங்கு பார்த்தாலும் எண்களும் எழுத்துக்களுமாக இருக்கிறது. ஒன்றுமே புரியவில்லையே என புலம்பினால் வருத்தம் வேண்டாம், எளிமையாக விளக்குகிறேன்.

100 என்கிற பைனரி எண் ஆனது ஆங்கில தலைப்பு எழுத்துக்களை(capital letters)குறிக்கிறது. இந்த பைனரி எண்ணில் தொடங்கும் மதிப்புகள், ஆங்கில தலைப்பு எழுத்துக்களுக்கான உள்ளீடுகள் என நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அதைத்தொடர்ந்து வரும், நான்கு பைனரி எண்கள் ஒவ்வொரு ஆங்கில எழுத்துக்களையும் குறிக்கிறது. ஆங்கிலத்தில் முதல் எழுத்து என்ன ? A தானே! அப்படியானால் 100-0001 இந்த உள்ளீடை வழங்கினால் உங்களுடைய கணிப்பொறியில்,A எனும் எழுத்து அச்சாகும். நீங்கள் ஏன் எனும் பொத்தானை அழுத்தும் போது இந்த குறியீடு தான் கணினிக்கு வழங்கப்படுகிறது. இந்த குறியீடை புரிந்து கொள்ளும் கணினி ஆனது A என்னும் எழுத்தை திரையில் காட்டுகிறது. இந்த வேலையை தான் உள்ளார்ந்த மின்கடத்திகள்(integrated chips) பார்த்துக் கொள்கிறது.

சரி ! கட்டுரை படித்துக் கொண்டிருக்கும் வாசகர்களுக்கென்று ஒரு செயல்பாடு தருகிறேன். உங்களுடைய பெயரை மேலே இருக்கின்ற அட்டவணையை அடிப்படையாகக் கொண்டு, எழுதி என்னுடைய மின்மடல் முகவரிக்கு(email )அனுப்புங்கள். அத்தோடு, இந்த கட்டுரை குறித்த உங்களுடைய கருத்துக்களையும் அனுப்புங்கள். அவ்வாறு அனுப்புபவர்களின் பெயர்களை, அடுத்த கட்டுரையில் தவறாமல் குறிப்பிடுகிறேன். எப்படி எழுத வேண்டும் என்று கேட்கிறீர்களா?

உதாரணமாக, SRI என்றால் 101-0011 101-0010 100-1001 என்று எழுத வேண்டும். அதற்காக இணைய கருவிகளை பயன்படுத்தக் கூடாது. முயற்சித்துப் பாருங்கள் எல்லாம் ஒரு பயிற்சிதான். இதை மற்றும் கற்றுக் கொண்டால் உங்கள் நண்பர்களுக்கு மத்தியில் ரகசிய குறியீட்டு மொழியில் பேசிக்கொள்ளலாம்.

நாம் முன்பே ரிமோட் கருவிகள் எப்படி வேலை செய்கிறது? என்று ஒரு கட்டுரையில் பார்த்திருக்கிறோம். அங்கு அகச்சிவப்பு நிற ஒளி கதிர்களை விட்டு விட்டு  அனுப்பும் போது,அதைப் பெற்றுக் கொள்ளும் உணர்வியானது(receiver )அதற்குரிய செயல்பாடை செய்கிறது.

அதேபோல, இங்கு விட்டு விட்டு மின்னழுத்தத்தை வழங்கும்போது அதற்குரிய செயல்பாடானது கணினியில் மேற்கொள்ளப்படுகிறது. இவை அனைத்தும் நாம் கண்ணிமைக்கும் நேரப் பொழுதுக்குள் நடந்து விடுவதால், அன்றாட வாழ்வில் நம்மால் இதை உணர முடிவதில்லை. ஒருவேளை, இதே உள்ளீடை நீங்கள் வழங்க வேண்டும் என்று நினைத்தால் கூட, மிகக் குறுகிய நேரத்திற்குள் நீங்கள் வெளியிலிருந்து ஏழு சசுவிட்ச்களைக் கொண்டு வழங்கினால் உங்களாலும் கணினித்திரையில் A என்னும் எழுத்தை பார்க்க முடியும்.

அடிப்படையில் கணினிகள் இயங்குவது இப்படி தான். அடுத்த முறை லினக்ஸ் முனையத்தில் கட்டளைகளை பிறப்பிக்க கீபோர்டை தட்டும் போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கீ போர்டு என்பதும் விட்டு விட்டு வேலை செய்யக்கூடிய  சுவிட்சுகள் தான். சரி லாஜிக்கல் அடிப்படையில் கீபோர்டுகள் எப்படி வேலை செய்கிறது என்று பார்த்துவிட்டோம். எலக்ட்ரானிக் அடிப்படையில் கீபோர்டு கருவிகள் எப்படி வேலை செய்ய முடியும்.

இவ்வாறு வழங்கப்படும் உள்ளீடுளானது கீ போர்டுகளுக்குள்ளேயே அதற்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் பிரத்யேக PCB board மூலம் பெறப்பட்டு அதற்குள்ளே வழங்கப்பட்டிருக்கும் உள்ளார்ந்த மின்சுற்றால் பரிசீலிக்கப்பட்டு கணினிக்கு அனுப்பப்படும். கணினியானது இந்த குறியீடை பயன்படுத்தி அதற்குரிய செயல்பாடு இயக்கும்.

ஆனால், இந்த குறியீட்டு முறையானது தற்காலத்தில் பெருமளவில் மாற்றங்களை சந்தித்திருக்கிறது. ஆம்  தற்கால தொழில்நுட்பத்தில் நிறுவனங்களுக்கு ஏற்றால் போல் கூட இந்த குறியீடுகள் பயன்படுத்தப்படுவதை அறிய முடிகிறது. மேலும், இணையத்தில் தேடும்போது பல்வேறு விதமான குறியீடு அட்டவணைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேற்படி நான் வழங்கியிருக்கும் குறியீடு அட்டவணையானது என்னுடைய பாடப்புத்தகத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. இணையத்தில் தேடி பார்க்கும்போது வெவ்வேறு விதமான குறியீட்டு அட்டவணைகளும் உங்களுக்கு காணக் கிடைக்கிறது.

எனவே குறிப்பிட்ட இந்த குறியீடு தான் என்று நிச்சயத்து சொல்ல முடியாவிட்டாலும்,அடிப்படையில் பைனரி எண்களின் தொகுப்பின் மூலமே தட்டச்சு பொறிகள் இயங்குவதை அறிந்து கொள்ள முடிகிறது. அதேநேரம் கீ போர்டுகளுக்குள் தாமிர முலாம் பூசப்பட்ட மிகச்சிறிய பட்டைகளும் வழங்கப்பட்டிருக்கும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட பட்டனை அமர்த்தும்போது, அதன் ஊடே மின்சாரம் பாயும். அந்த மின்சாரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கட்டளைகள் கணினிக்கு கடத்தப்படுகிறது.

இதே போல, தமிழ் மொழி உள்ளிட்ட இன்ன பிற மொழிகளுக்கும் குறியீடுகள் இருக்கின்றன. அந்தந்த குறியீடுகளுக்கு ஏற்றார் போல் நாம் உள்ளீடுகளை வழங்கும்போது கணினி திரையில் தோன்றும். எனவே, A என்கிற பட்டனை தட்டுவதால் மட்டும் அல்ல அதற்குரிய குறியீடு வழங்குவதால் தான் அந்த உள்ளீடு கணினிக்கு செல்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஆனால், தற்கால செய்யறிவு யுகத்தில் நாம் எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் நாம் பயணிக்க வேண்டிய தூரம் எவ்வளவு இருக்கிறது. ஆனாலும், கணினி மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பத்தில் பூஜ்ஜியம் மற்றும் ஒன்று இன்றி எதுவும் இல்லை.

இந்த இடத்தில் வெறும் இரண்டே வாய்ப்புகள் மட்டும் தான், ஒன்று நீங்கள் ஓட வேண்டும் (1) அல்லது ஓய (0) வேண்டும்.

மீண்டும் ஒரு சுவாரசியமான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையில் சந்திக்கலாம்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com

#asciiCode #basicElectronics #dailyElectronics #digitalElectronics #electronics #keyboards #logicGates #logicSystems

2025-03-12

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்து பார்த்து வருகிறோம். தற்கால கணினி மற்றும் மொபைல் துறையின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது USB (யு.எஸ்.பி)என அழைக்கப்படும் universal serial Bus தொழில்நுட்பம் தான்.

1995 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட்,IBM உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் இணைந்து யு.எஸ்.பி தொழில்நுட்பத்தை வடிவமைக்க தொடங்கியது. இதன் பயனாக, 1996 ஆம் ஆண்டு usb தொழில் நுட்பமானது அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பத்தில் version ஒன்று தொடங்கி இப்பொழுது நான்கு வரை காணக் கிடைக்கிறது(Usb version 1 to 4).

இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டதன் மிக முக்கியமான நோக்கம் என்னவென்றால், அனைத்து விதமான கருவிகளிலும், ஒரே விதமான இணைப்பு முறையை பயன்படுத்துவது மற்றும் தரவுகள், மின்சாரம் ஆகிய அனைத்தையும் ஒரே இணைப்பு வடத்தின் மூலமாக கொண்டு செல்வது போன்றவை அடிப்படையாக கவனத்தில் கொள்ளப்பட்டன(universal connecting as well as  data and current transfer) .

தற்காலத்தில் யுஎஸ்பி தொழில்நுட்பமானது, பல்வேறு வகையில் மாற்றங்களை சந்தித்து இருக்கிறது type A,B,C என பலவகையாக usb தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், இந்த தொழில்நுட்பத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால் usb கேபிள்களை பயன்படுத்தி உங்களால் தரவுகளைப் பகிர முடியும், இணைப்பை வழங்க முடியும், அதே நேரம் மின்சாரத்தையும் கடத்த முடியும்.

தற்காலத்தில் பழமையான யுஎஸ்பி இணைப்புகள், டைப் சி வகையிலான இணைப்புகளின் மூலம் பதிலீடு செய்யப்பட்டு கொண்டு வருகிறது(Type C is replacing traditional USB). ஐரோப்பிய ஒன்றியம் போன்ற உலகளாவிய நாடுகள், டைப் சி தொழில்நுட்பத்திற்கு மாற தொடங்கியிருக்கின்றன.ஆனால், இதுவும் ஒருவகையில் usb-யின் கடைக்குட்டி தான்.

இந்த தொழில்நுட்பத்திற்கு பின்னால் பல்வேறு விதமான விந்தைகள் ஒழிந்து இருக்கிறது. ஆனால், நாம் அடிப்படையாக இந்த யுஸ்பி கேபிள்-ஐ வெட்டிப் பார்த்தால், நான்கே நான்கு நிற ஒயர்கள்(wires )மட்டும்தான் உங்கள் கண்களில் படும்..

இதில் சிவப்பு மற்றும் கருப்பு நிற இணைப்பு வடங்கள் முறையே ஐந்து வோல்ட் மற்றும் தரை இணைப்பிற்கு(Ground )பயன்படுத்தப்படுகிறது. தற்காலத்தில், வெளியாக கூடிய சில யுஎஸ்பி கேபிள்கள் அதிகப்படியான வோல்டேஜ் மின்சாரத்தை கூட தாங்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. ஆனாலும், பரவலாக பயன்படுத்தப்படும் யு எஸ் பி வடங்களில், உங்களுக்கு 5volt மின்னழுத்தத்தை பராமரிக்கும் வகையிலேயே தயாரிக்கப்படுகிறது.

சரி இந்த ரெண்டு wire களையும் விட்டுவிடுவோம். அதற்குள்ளே இன்னும் இரண்டு நிற ஒயர்கள் உங்களுக்கு காண கிடைக்கும்.அவை தான் வெள்ளை மற்றும் பச்சை. இவைதான் மிக மிக முக்கியமானவை. இந்த வெள்ளை வடமானது உங்களுக்கு தரவுகளை பெறுவதற்கு பயன்படுகிறது(Data+). அதேநேரம் பச்சை வடத்தின் மூலம், உங்களால் தரவுகளை கடத்த முடியும்(data-). அதனால்தான், ஒரே யுஎஸ்பி கேபிள் வைத்துக் கொண்டு ஒரே நேரத்தில் உங்களால் தரவுகளை அனுப்பவும் முடியும், தரவுகளை பெற முடியும். கேட்பதற்கு ஏதோ எளிமையாக இருக்கலாம்.ஆனால், அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தி கவனிக்க தவறும் ஒரு மிக முக்கியமான அம்சம் இது.

அந்த காலத்தில் எல்லாம் ஒயர்களின் வழியாக மின்சாரத்தை மட்டுமே அனுப்ப முடியும் என நினைத்துக் கொண்டிருந்த நமக்கு ,விந்தைகளைக் கொண்டு வந்து சேர்த்தது இந்த usb கேபிள். என்றும் கூட எச் டி எம் ஐ (HDMI),வி ஜி ஏ (VGA)போன்ற கேபிள்களை பயன்படுத்துகிறோம்.ஆனால், இவற்றில் இன்றளவும் மின்சாரத்தை கடத்த முடியாது. சரி டைப் சி தொழில்நுட்பத்தில், அப்படி என்னப்பா சிறப்பு இருக்கிறது? என்று கேட்டால் usb யை விடவும் டைப் சி சற்றே முன்னேறியது. டைப் சி தொழில்நுட்பத்தில், உங்களால் இன்னும் சிறப்பாக மின்சாரத்தையும் அதே நேரம் தரவுகளையும் பகிர முடியும்.

என்னதான் யுஎஸ்பி தொழில்நுட்பம் தரவுகளைப் பரப்ப,பகிர சிறப்பாக அமைந்தாலும் இங்கே சில குறைபாடுகளும் இருக்கத்தான் செய்கிறது. உதாரணமாக, என்னதான் ஏவி(AV )கேபிள், எச்டிஎம்ஐ(HDMI) கேபிள் களை போல இதனாலும் செயலாற்ற முடிந்தாலும், உடனுக்குடன் செட்டாப் பாக்ஸில் இருந்து தொலைக்காட்சிக்கு தரவுகளை கடத்துவதற்கு usb உகந்த தொழில்நுட்பம் அல்ல.

மேலும் அன்பு நண்பர்கள் வெளியூருக்கு பயணிக்கும் போது, தெரியாத இடங்களில் உங்களுடைய மொபைல் கருவிகளை சார்ஜ் செய்ய நேரிட்டால், அதற்காக வெறும் மின்சாரத்தை மட்டும் கடத்தும் யுஎஸ்பி(charging only usb cable) வடங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இதை நான் ஏன் குறிப்பிடுகிறேன் என்றால்! உங்களுடைய usb வடத்தை வைத்து உங்களுடைய தரவுகளை மிக எளிமையாக திருட முடியும். இன்றளவில் நடத்தப்படக்கூடிய பெரும்பாலான தொழில்நுட்ப தகவல் திருட்டுகளுக்கு, இந்த யுஎஸ்பி வடங்களும் ஒரு மிக முக்கிய காரணம்.

மேலும், என்னதான் மிகக் குறைவான மின்னழுத்தம் வெளிப்பட்டாலும், இது போன்ற யுஎஸ்பி வடங்களை குழந்தைகளிடம் கொடுப்பதை தவிருங்கள்.இத்தகைய usb வடங்களை பற்களால் கடித்த குழந்தைகள் மின்னதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செய்திகளை கூட நான் பலமுறை கவனித்திருக்கிறேன். என்னதான் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் இருந்தாலும், எலக்ட்ரானிக் கருவிகளையும் கவனமாக கையாள வேண்டியது முக்கியமானது.

மேலும் தரம் குறைந்த usb கேபிள்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ISI certificate போன்ற முத்திரை கொண்ட, பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த usb கேபிள்களை மட்டும் வாங்கவும். தரம் குறைந்த கேபிள்கள், எளிதில் அறுந்து விட வாய்ப்பு இருப்பதோடு, மின்னதிர்ச்சி,தீப்பிடித்தல் போன்ற பிரச்சனைகள் கூட ஏற்படலாம். மேலும், உங்களுடைய மொபைல் பேட்டரிக்கும் அது உகந்ததாக அமையாது.

அதுபோல, ஏற்கனவே அறுந்து போன யுஎஸ்பி கேபிள்களை கண்டபடி ஒட்டவைத்து பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், இதனால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும், மேலும் சிலர் ஒட்ட வைக்கிறேன்! என்கிற பெயரில் டேட்டாவை கடத்தும் வடத்தையும், மின்சாரத்தை கடத்தும் வடத்தையும் தெரிந்தும் தெரியாமல் இணைத்து விடுவார்கள். இதனால், உங்கள் மொபைல் போனில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும், இது போன்ற யுஎஸ்பி கேபிள்களில் என்னதான் வெப்ப காப்பு(heat resistive )நடவடிக்கைகள் செய்யப்பட்டாலும், இத்தகைய கேபிள்கள் அருந்துவிட்டது, என்றால் அவற்றை பயன்படுத்தாது முறைப்படி அப்புறப்படுத்துவது நல்லது. அதை விடுத்து, மேலே டேப்பை சுற்றி பயன்படுத்தும் போது, வெப்பத்தின் காரணமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக, தரம் குறைந்த usb கேபிளாக இருந்தால் பிரச்சனை அதிகமாக கூடும்.

இவை அனைத்தையும் நான் கவனித்த அனுபவத்தின் அடிப்படையில் குறிப்பிடுகிறேன். ஏனெனில், பல தருணங்களில் வருமுன் காப்பது சாலச்சிறந்தது.

அன்பு நண்பர்கள் ஒரு புதுவித தொழில்நுட்ப தகவலை எளிமையாக அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com

https://kaniyam.com/what-is-inside-the-usb-cable/

#basicElectronics #dailyElectronics #electronics #USB

2025-03-06

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், ஏற்கனவே அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகள் குறித்து பார்த்திருக்கிறோம். குறிப்பாக சமீபத்தில் தொடுதிரை தொழில்நுட்பம் குறித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். ஆனால் இந்த தொடுதிரை(Touch screen)தொழில்நுட்பமானது, இன்றளவும் பெரும்பாலான கணினிகளில் பயன்படுத்தப்படுவதில்லை.

அடிப்படையில் தொடுதிரை என்பது விலை உயர்ந்தது மற்றும் எளிதில் சேதம் அடையக் கூடியது. கணினி மற்றும் தொலைக்காட்சி பற்றி போன்றவற்றிற்கு தொடுதிரைகள் அவ்வளவு சிறப்பாக செயல்படுவதில்லை. தற்காலத்தில் வெளியாக கூடிய, கணினி திரைகளில்(Monitors amd displays)கூட பெரும்பாலும், தொடுதிரைவசதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. மாறாக, சுட்டி என அழைக்கப்படும் மௌசுக்கு(Mouse) தான் மவுசு அதிகம்.

பார்ப்பதற்கு எலி போல இருப்பதால் இதற்கு மௌஸ் என பெயர் வைத்து விட்டார்கள்! என்று பல்வேறு கதைகள் இணையத்தில் உலா வருகிறது. ஆனால், இதற்குப் பின்பு இருக்கக்கூடிய தொழில்நுட்பம் சற்று சுவாரசியமானது.

வழக்கம் போல இதற்குள்ளும் ஒரு உள்ளார்ந்த மின்சுற்றுதான்(Integrated circuit )அமைக்கப்பட்டிருக்கும். சில மின்தடைகள்(Resistors) மற்றும் மின் தேக்கிகளை(Capacitors) கொண்டு போதியமான அளவு மின்னழுத்தம் மற்றும் மின்சாரமானது பராமரிக்கப்படும். அதற்குப் பின்பாகத்தான், இதன் செயல்முறை வடிவமானது வெளிப்படுகிறது. ஒரு பந்து போன்ற அமைப்பு(rolling ball)இருக்கும். இந்த பந்து போன்ற அமைப்புதான் நாம் அனைத்து இடங்களில் நகர்த்தும்போதும் அதற்கு ஏற்றார் போல சுட்டியை நகர்த்துகிறது.

சரி நாம் சுட்டியை நகர்த்துவதை எப்படி கணினி புரிந்து கொள்கிறது. நீங்கள் சுட்டியை திருப்பி வைத்து பார்த்தால் பின்னாடி ஒரு விளக்கு எறிவது போல தெரியும்(Thats actually IR beam). தற்போது வெளியாக கூடிய சுட்டிக்களில் led பல்பு போல ஒரு சிறிய அமைப்பு மட்டுமே இருக்கும். ஆனால் அதில் எரியக்கூடிய விளக்கு பெரும்பாலும் தெரிவதில்லை(Invisible IR). பழைய வடம் இணைக்கப்பட்ட சுட்டிகளில்(Wired mouses)உங்களுக்கு ஒரு சிவப்பு நிற விளக்கு எரிவது தெரியும். நான் ரிமோட்டுகள் குறித்த கட்டுரையில் முன்பே குறிப்பிட்டிருந்தது போல தான் நாம் சுட்டியை நகர்த்தும்போது, இந்த விளக்கில் இருந்து வரும் வெளிச்சம் மாறுபடுகிறது, காரணம் சுட்டிக்கு பின்னால் நகர்த்தும்போது அதனோடு சேர்ந்து நகரக் கூடிய வகையில் ஒரு சுருள் அமைப்பு போல(wheel mechanism) வைக்கப்பட்டிருக்கும்.

இது நகரும்போது வெளிச்சத்தை மறைக்கும் பின்பு வெளிவிடும், பின்பு மறைக்கும் பின்பு வெளிவிடும்(it’ll block and allow light when movement). இதன் மூலமே இயக்கம் கண்டறியப்படுகிறது. மேலும் இந்த வெளிச்சத்தை உள்வாங்கிக் கொள்வதற்காக ஒளிமின் டையோடுகளும்(Receivers – photo voltaic cell)பொருத்தப்பட்டு இருக்கும். இந்த ஒளிமின் டையோடுகளில் மாறி மாறி வெளிச்சம் பட்டும்,படாமலும் இருப்பதை வைத்து சுட்டு இயக்கத்தில் இருப்பதை கண்டுபிடித்துக்கொள்ளலாம். மேலும், இந்த ஒளி எந்த வகையில் பட வேண்டும், என்பதற்காக சிறிய கண்ணாடி போன்ற ஒரு வழிகாட்டி(light guide)அமைப்பும் இருக்கும்.

கேட்பதற்கு சற்றே குழப்பமாக இருந்தால் கீழே வழங்கி இருக்கும் புகைப்படத்தை பாருங்கள் எளிமையாக புரிந்து கொள்ளலாம்.

ஆனால், தற்காலத்தில் வரக்கூடிய சுட்டிகளில் இது போன்ற பந்து போன்ற அமைப்புகள் இல்லாத வகையிலும் வடிவமைக்கப்படுகிறது.

அத்தகைய சுட்டிகள் எப்படி வேலை செய்கிறது என்று உங்களுக்குள் குழப்பம் இருக்கலாம். மோஷன் சென்சார் எனும் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு பொருள் நகர்வதை வைத்து அதன் இயக்கத்தை கண்டுபிடிக்க முடியும். இந்த இடத்தில் led விளக்கு மட்டுமே இந்த வேலையை பார்த்துக் கொள்வதால் இந்த அடிப்படையில் இயங்கக்கூடிய சுட்டிகளும் உங்களுக்கு காண கிடைக்கும்.

அதற்குப் பிறகு என்ன சுட்டியில் ஒவ்வொரு இடமாக நகர்த்துவதற்கு மேலே உருட்டும் சக்கரம் போன்ற ஒரு அமைப்பு காணப்படும்.இரண்டு பக்கமும் கிளிக் செய்வதற்கு வசதியாக இரண்டு பட்டன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். தற்கால சுட்டிகளில்,Latency என்னும் ஒரு வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, நீங்கள் வைத்திருக்கும் சுட்டியின் Lattency மதிப்பானது ஆயிரம்(1000) என வைத்துக் கொள்வோம்.அதாவது உங்கள் கையில் இருக்கும் சுட்டியானது வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு அளவிற்கு துல்லியமாக தகவல்களை வழங்கக்கூடியது. இதுவே வீடியோ கேம் விளையாடும் சுட்டிகளில் இந்த மதிப்பானது லட்சங்களை கூட தாண்டும். அப்போதுதான் வீடியோ கேம் விளையாட்டில் எதிரி உங்களை சுட வரும்போது உடனடியாக நகர்ந்து அவரின் மீது குறி வைக்க முடியும்.

இதுபோன்ற சுட்டிகள் பெரும்பாலும் பேட்டரிகளின் மூலமே மின்னாற்றலை பெற்றுக் கொள்கிறது. இவை இயங்குவதற்கு மிகக் குறைவான மின்னாற்றலே போதும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஆனால், நான் முன்பு குறிப்பிட்ட வீடியோ கேமுக்கு ஏற்ற சுட்டிகளுக்கு உங்களுக்கு அடிக்கடி பேட்டரிகளை மாற்ற வேண்டிய தேவை இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

இதற்கு மிக முக்கியமான காரணம் என்னவென்றால் எந்த அளவிற்கு ஒரு எலக்ட்ரானிக் பொருளின் செயல் திறன் சிறப்பாக இருக்கிறதோ! அதற்கு ஏற்றார் போல நாம் மின் ஆற்றலையும் அதிகமாக வழங்க வேண்டியிருக்கும். அதற்கு ஏற்றார் போல மின்ஏற்றம்(Rechargeable )செய்யக்கூடிய வகையிலான சுட்டிகளும் மார்க்கெட்டுகளில் கிடைக்காமல் இல்லை.

இந்தச் சுட்டியின் சமிக்ஞைகள் அனைத்தும் உள்ளே வழங்கப்பட்டிருக்கும், உள்ளார்ந்த மின்சுற்றின் மூலம் பரிசீலிக்கப்பட்டு உடனுக்குடன் கணினிக்கு கடத்தப்படுகிறது. இந்த கடத்தப்படும் வேலை இரண்டு வகையில் நடைபெறும் ஒன்று நீங்கள் வைத்திருக்கக்கூடிய சுட்டி வயர் அல்லது வயர்லெஸ் அடிப்படையிலானதாக இருக்கும்

அதாவது ப்ளூடூத் தொழில்நுட்பத்தோடு அல்லது அதற்கென வழங்கப்பட்டிருக்கும் ஒரு சிறிய பென் டிரைவ் போன்ற tongle அமைப்பு மூலமோ தரவுகள் கடத்தப்படும். வழக்கமான, கம்பி வட வகையில் வழங்கப்பட்டிருக்கும்(wired)வடத்தின் மூலமாக தரவுகள் உடனுக்குடன் கணினிக்கு கடத்தப்படும்.

உள்ளே பயன்படுத்தப்பட்டு இருக்கும் ஆப்டிகல் எல்இடி எலக்ட்ரானிக் பொருட்கள், உள்ளார்ந்த மின்சுற்று மற்றும் இன்ன பிற பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சுட்டியின் விலையும் அமையும். தற்காலத்தில் குறைந்தபட்சம் 80 ரூபாயில் தொடங்கி 8000 ரூபாய்க்கு கூட சர்வ சாதாரணமாக சுட்டிகள் கிடைக்கிறது.

ஆனால், கணினியை எளிமையாக பயன்படுத்துவதற்கு ஒரு இன்றியமையாத கருவி இந்தச் சுட்டி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்தக் கட்டுரையில் சுட்டியின் அடிப்படையான செயல்முறை குறித்து மட்டுமே நான் விளக்கி இருக்கிறேன். அடுத்த முறை சுட்டியை எடுத்து டிக் டிக் டிக் என தட்டும் போது அதன் பின்னால் இருக்கும் அறிவியலையும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு சுவாரசியமான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com

https://kaniyam.com/how-does-computer-mouse-works-in-tamil/

#basicElectronics #dailyElectronics #mouseInTamil

2025-02-23

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் பல்வேறு விதமான அன்றாட எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் குறித்து நாம் விவாதித்து வருகிறோம்.

அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்க இருக்கக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் கருவியானது, நம் அன்றாட வாழ்வில் மிக மிக முக்கியமானது. நாம் அடிக்கடி மறக்கக்கூடிய, பேட்டரி வாங்கி போட சோம்பேறித்தன படக்கூடிய அனைவர் கைகளிலும் அன்றாடம் புழங்கும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கருவி தான் ரிமோட்(Remote control).

வீட்டில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என அறிந்து கொள்வதற்கு யார் கையில் அதிக நேரம் ரிமோட் இருக்கிறதோ! அவர்தான் செல்வாக்கு மிக்கவர் என்ற ஒரு கருத்தும் கொஞ்சம் ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக நிலவியது. பின்பு மொபைல் கருவிகளின் அசுர வளர்ச்சிக்கு பிறகு தொலைக்காட்சி துறை சற்று டல்லாக தான் போய்க்கொண்டிருக்கிறது.

இருந்தாலும், டிவி ரிமோட்டு களுக்காக அனுதினம் பல குடும்பங்களிலும் உலகப் போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வேடிக்கைகள் மறுபுறம் இருக்கலாம். ஆனால் எலக்ட்ரானிக்ஸ் கண்டுபிடிப்புகளிலேயே மிக மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாக டிவி ரிமோட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

குடும்பங்களில் நடக்கும் உலகப் போர் மட்டுமல்ல! உண்மையில் இந்த ரிமோட் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படுவதற்கான மிக முக்கியமான காரணமே இரண்டாம் உலகப்போர் தான். இரண்டாம் உலகப் போர் காலத்தில் நேசப்படைகளை தாக்குவதற்காக அச்சு நாடுகள் அகச்சிவப்பு  ஒளி அலைகளைக் கொண்டு  வெடிகுண்டுகளை வெடிக்க செய்யும் தொழில்நுட்பத்தை தயாரித்து அதை கப்பல்களில் பொருத்தி நேசநாட்டு படை கப்பல்களை வீழ்த்தி இருப்பதாக வரலாற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

உலகப் போரின் முடிவுக்குப் பிறகு, இந்த தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு அகச்சிவப்புக் கதிர்களை மீண்டும்,மீண்டும் எரிய வைத்து அதை சமிக்ஞைகளாக மாற்றி அனுப்புவதன் மூலம், அதற்குரிய ரிசீவர் அலைகளை ஏற்று அதற்குரிய செயலை செய்து விட முடியும்.

இதை எளிமையாக விளக்க வேண்டும் என்றால் நீங்கள் ஒரு கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டிருக்கிறீர்கள். அந்த கோபுரத்தில் இருக்கக்கூடிய சிவப்பு,மஞ்சள்,பச்சை நிற விளக்குகளை எரிய வைப்பது தான் உங்களது வேலை. நான் கோபுரத்தின் கீழே நின்று கொண்டிருக்கிறேன். நான் இங்கிருந்து சொல்வது உங்கள் காதுகளுக்கு வந்து சேராது. அதற்கு பதிலாக என் கையில் இருக்கும் ஒரு டார்ச் லைட்டை ஒருமுறை எரிய வைத்து அனைத்தால்,சிவப்பு விளக்கை போட வேண்டும்.இரண்டு முறை எறிய வைத்து அணைத்தால் மஞ்சள் விளக்கு போட வேண்டும். மூன்று முறை அணைய வைத்து அணைத்தால் பச்சை விளக்கை போட வேண்டும் என்று முன்பே உங்களிடம் சொல்லி வைத்து விடுகிறேன். புற சூழல்களுக்கு ஏற்ப எந்த விளக்கை போட வேண்டுமோ அதற்கு ஏற்ற சமிக்ஞையை டார்ச் லைட் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை பார்த்து அதற்குரிய விளக்கை போடுகிறீர்கள்.

இங்கே நான்தான் ட்ரான்ஸ்மிட்டர்(Transmitter)நீங்கள்தான் ரிசீவர்(Receiver). நான்தான் ரிமோட் கருவி, நீங்கள் தான் தொலைக்காட்சி பெட்டி. படிப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும்,எளிமையாக புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். அகச்சிவப்பு ஒளிகளை பூஜ்ஜியம், ஒன்று என மாற்றி மாற்றி சமிக்ஞைகளாக அனுப்பும் போது, அதை புரிந்து கொள்ளக்கூடிய தொலைக்காட்சியில் இருக்கும் ரிசீவர்கள் அதற்கு ஏற்றவாறு தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றுகிறது. நம்முடைய டிவி ரிமோட்டுகளில் ஒரு சிறிய பல்பு போல இருக்கும். ஆனால் எவ்வளவுதான் பட்டனை மாற்றி மாற்றி அழுத்தினாலும் அதிலிருந்து வெளிச்சம் வராது என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!உண்மையில் அதிலிருந்து வரக்கூடிய அகச்சிவப்பு ஒளிக்கதிர்களை உங்கள் வெறும் கண்களால் பார்க்க முடியாது.

உங்கள் கையில் இருக்கும் மொபைல் போன் கேமராவை ஆன் செய்துவிட்டு, கேமராவுக்கு நேராக வைத்து ரிமோட்டில் இருக்கும் பட்டன்களை தட்டினால் உங்களால் அகச்சிவப்பு நிற கதிர்களை பார்க்க முடியும். இதை வைத்து உங்களுடைய பழைய ரிமோட்டில் பேட்டரி இருக்கிறதா? அல்லது அதை மாற்ற வேண்டிய காலம் வந்து விட்டதா? என்று கூட புரிந்து கொள்ளலாம்.

மற்றபடி இந்த சமிக்ஞைகளை முறையாக அனுப்புவதற்கான ஒரு உள்ளார்ந்த மின்சுற்றானது(Integrated chip)ஒவ்வொரு ரிமோட் கருவிகளும் பொருத்தப்பட்டிருக்கும். தற்காலத்தில் வரும் ரிமோட்டு கருவிகளை நாமாகவே புரோகிராம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமா,  நான் சமீபமாக பயன்படுத்தி வரும் ஒரு டிடிஹெச்(DTH) ரிமோட் கருவியில், உங்கள் வீட்டில் இருக்கும் சாதாரண டிவி ரிமோட்டின் செயல்பாடுகளை பதிவு செய்ய முடியும். இதனால் செட்டாப் பாக்ஸ்க்கு தனி ரிமோட்டு டிவிக்கு, தனி ரிமோட் என கஷ்டப்பட வேண்டிய தேவையில்லை.

ஆனால், இந்த அகச்சிவப்பு நிறக்கதிர்களில் சிக்கலும் இருக்கிறது. உதாரணமாக நான் கோபுரத்தை நோக்கி டார்ச் லைட்டை அடிக்கிறேன் என்றால் அது உங்கள் கண்களில் தெரிய வேண்டும்.அதை விடுத்து நான் ஏதோ ஒரு திசையில் டார்ச் லைட்டை அடித்தால் உங்களுக்கு எப்படி தெரிய வரும். ஒரே நிலை தான் டிவி ரிமோட்டுகளுக்கும் அகச்சிவப்பு ஒளிகளை டிவியில் இருக்கும் ரிசீவருக்கு நேராக அடிக்க வேண்டும். அப்படி அடிக்கும் போது தான் சரியான சமிக்ஞையை பெற்று அதற்குரிய செயலானது நடைபெறும்.

ஆனால், தற்காலத்தில் இருக்கும் ரிமோட்டு கருவிகள் ப்ளூடூத்(Bluetooth remote)தொழில்நுட்பத்தில் கூட இயங்க தொடங்கி விட்டன. இந்த இடத்தில் தகவலானது ரேடியோ அலைகளாக பகிரப்படுகிறது. இதனால் சுவற்றுக்குள் ஊடுருவி கூட சமிக்ஞைகளை கொண்டு செல்ல முடியும். மேலும் அகச்சிவப்பு கதிர்கள் 30 அடி தூரம் சிறப்பாக பயணிக்கும் என்றால், இந்த ப்ளூடூத் அலைவரிசைகள் 100 அடிக்கும் அதிகமான தூரம் சுவற்றை ஊடுருவி கூட சென்று விடும். மேலும், நேராக தான் வைத்து அடிக்க வேண்டும் என்றெல்லாம் தேவையில்லை.

இதனால் இன்னும் சில ஆண்டுகளில் நான் முன்பு குறிப்பிட்ட அகச்சிவப்பு கதிர்களை(IR remote)அடிப்படையிலான டிவி ரிமோட்டுகள் மற்றும் இன்ன பிற ரிமோட் கருவிகள் காணாமல் போகும் என்பதில் மாற்று கருத்து இல்லை. தற்காலத்திலேயே உங்களுடைய மொபைல் ஃபோன்களை கூட டிவி,ஏசி போன்ற கருவிகளுக்கு ரிமோட் ஆக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆனால், என்னதான் இருந்தாலும் அகச்சிவப்பு கதிர்களை கொண்டு பயன்படுத்தப்படக்கூடிய ரிமோட் தொழில்நுட்பமானது இன்ன பிற இடங்களில் கூட பயன்படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக தெர்மல் இமேஜிங் கேமராக்களில் இந்த அகச்சிவப்பு ஒளிக்கதிர்கள் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது.

மேலும்,வானியல் சார்ந்த துறைகளில் கூட இதன் பயன்பாடு நீடிக்கிறது. சரி என்ன தான் இருந்தாலும், ஒரு புதிய தகவலை அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதேநேரம் அடுத்த தடவை உங்களுடைய டிவி ரிமோட் வேலை செய்யவில்லை! என்றால் தேவையின்றி அதோடு குத்து சண்டை போடுவதை விட்டுவிட்டு, உங்கள் மொபைல் போனை எடுத்து கேமராவை ஓபன் செய்து ரிமோட் பட்டன்களை அடித்து பாருங்கள். பேட்டரி தீர்ந்து விட்டது என்பதை இப்படியும் கண்டுபிடிக்கலாம்.

மற்றும் ஒரு சுவாரசியமான அன்றாடம் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தோடு உங்களை வந்து சந்திக்கிறேன். (லாஜிக் கதவுகள் தொடர்பான கட்டுரையும், விரைவில் வெளியாகும்)

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் : srikaleeswarar@myyahoo.com
இணையம்: ssktamil.wordpress.com

https://kaniyam.com/how-does-remotes-work/

#basicElectronics #dailyElectronics #electronics

2025-02-03

தற்காலத்தில் மொபைல் கருவிகள் லேப்டாப்கள் உள்ளிட்ட கணினி மற்றும் கணினியோடு தொடர்புடைய சாதனங்கள் பலவற்றிலும், மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது தொடு திரை வசதி.  

2010 காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு மொபைல் கருவிகளின் வருகை தொடங்கியிருந்தது. இருந்த போதிலும், சிம்பியான் விண்டோஸ் லினக்ஸ் போன்ற இயங்குதளங்களைக் கொண்டு இயங்கிய ஸ்மார்ட் மொபைல் கருவிகளும் பெரும்பாலும் சந்தைகளில் காண கிடைத்தன. இத்தகைய மொபைல் கருவிகளில் தொடுதிரைவசதியானது(Touch screen)அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. தொடக்க காலகட்டத்தில், தொடுதிரை மொபைல் போன் வைத்திருப்பவர் நிச்சயம் வசதி படைத்தவராக இருப்பார் எனும் பிம்பமும் இருந்தது. பின்னாளில் சீன மொபைல் கருவிகளின் வருகை மற்றும் அதிகரித்த உதிரிபாக உற்பத்தி உள்ளிட்ட காரணங்களால் ஸ்மார்ட் தொடுதிரை மொபைல் திரைகளின் விலை பெருமளவு குறைந்தது. எனக்கு கடைசியாக நினைவிருந்தவரை, குறைந்தபட்ச அளவில்(limited specifications) பயன்படுத்தக்கூடிய தொடுதிரை மொபைல் கருவியின் விலையானது, இணையத்தில் 2000 ரூபாய்க்கு கீழ் கூட விற்கப்பட்டது.

இவ்வளவு தூரம் பயன்படுத்தப்படும் தொடுதிரை தொழில்நுட்பத்திற்குள் என்னதான் இருக்கிறது? என்று எனக்குள்ளேயே பல ஆண்டுகள் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு, இன்று அது குறித்து கட்டுரை எழுதலாம் என குறிப்புகளை தேடிக்கொண்டிருந்தேன். நான் தேடிக் கண்டுபிடித்த மற்றும் நான் ஏற்கனவே கணித்திருந்த சில தகவல்களை இன்று உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

அதற்கு முன்பாக என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

kaniyam.com/tag/electronics/

முதலில் என்னுடைய கணிப்பில் இருந்து ஆரம்பிப்போம்! தொடுதிரை என்பது செயல்பட வேண்டுமானால், நிச்சயமாக நாம் கை வைக்கும் போது ஏதாவது மாற்றம் ஏற்பட வேண்டும். ஒருவேளை அந்த மாற்றமானது மின்புலத்தில் ஏற்படலாம் அல்லது மின்தடையில் ஏற்படலாம். உண்மையில் நான் கணித்தது போல இந்த அடிப்படையிலேயே பெரும்பாலான தொடுதிரைகள் செயல்படுகிறது.

பொதுவாக தொடுதிரைகளில் மூன்று வகைகள் காணப்படுகிறது.அவை எவை எவை என்று தான் இன்றைக்கு நாம் பார்க்கவிருக்கிறோம்.

முதலாவது வகை தொடுதிரையானது மின் தடை அடிப்படையிலான தொடுதிரை(Resistive Touch)என அறியப்படுகிறது. எல்சிடி ஒளி திரைக்கு மேலே, மின்தடை அடிப்படையிலான ஒரு திரை பொருத்தப்பட்டு இருக்கும். இந்தத் திரை ஒளியை வெளியிடும்(transparent) வகையில் இருக்க வேண்டும். இதற்காக இண்டியம் தகர ஆக்சைடு(Indium tin oxide)அடிப்படை இலான பூச்சு வழங்கப்படுவதை அறிந்து கொள்கிறோம் முடிகிறது.

சரி இந்த மின்தடை அடிப்படையிலான? தொடுதிரை எப்படி வேலை செய்கிறது என்று பார்ப்போம். இந்த தொடு திரையில் இரண்டு வகையான அடுக்குகள் இருக்கும் ஒரு அடுக்கில் மின்புலத்தைக் கொண்ட திரை இருக்கும். அதற்கு மேலே மின்தடை உலோக அடிப்படையிலான அடுக்கு(resistive metal layer)இருக்கும். மின்புலத்தைக் கொண்ட திரையில் கடத்தும் பொருட்கள்(conductive materials)பயன்படுத்தப்படும். நீங்கள் திரைக்கு மேலே அழுத்தத்தை செலுத்தும் போது, அந்த அழுத்தத்திற்கு ஏற்ப மொபைல் கருவியில் இருக்கும் உணர்வுகளைக் கொண்டு நீங்கள் எந்த இடத்தில் அழுத்துகிறீர்களோ? அதற்கு ஏற்ற சமிக்ஞையானது பெறப்பட்டு அதற்கு ஏற்றால் போல் வேலை செய்யப்படுகிறது. சுருக்கமாக சொல்லப்போனால், நீங்கள் அழுத்தம் கொடுத்தால் மின்தடை மாறும். அதனால்,அந்த குறிப்பிட்ட இடத்திற்கான பணி அரங்கேற்றப்படுகிறது.( Resistence changes and the IC detects it and execute the command)

இத்தகைய திரையில் நீங்கள் வெறும் கைகளால் அழுத்தம் கொடுத்தாலும் சரி அல்லது ரப்பர் கையுறைய அணிந்து கொண்டு அழுத்தம் கொடுத்தாலும் சரி. ஏனெனில் இத்தகைய தொடுதிரைகளில் அழுத்தத்தை மட்டும் (pressure is enough for its function) கொண்டே செயல்படுகிறது. இதுபோன்ற, தொடு திரைகள் பிறவற்றை ஒப்பிடும்போது, விலை மலிவானது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆனால், இத்தகைய தொடுதிரையை பயன்படுத்தும் போது, ஒளிதிரையில் இருந்து வெளிப்படக்கூடிய சுமார் 75% ஒளி மட்டுமே நமக்கு வெளியீடாக(only we get 75% light output from the main display)கிடைக்கும். எனவே விலை மலிவான கருவிகளில், பெரும்பாலும் பயன்படுத்தப்படும் தொடுதிரையாக இருக்கிறது. ஆரம்ப காலத்தில் வெளியான நோக்கியா மொபைல் கருவிகளில் மொபைல் கருவிகளில் உள்ளே பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு சிறிய குச்சியின் (stylus) வழங்கப்பட்டிருக்கும். பெரும்பாலான அத்தகைய திரைகள் மின்தடை அடிப்படையிலான தொடுதிரை தான்.

அடுத்ததாக,நாம் பார்க்க இருக்கும் தொடு திரையானது மின் தேக்கி அடிப்படையிலான தொடுதிரை ஆகும்.

இத்தகைய தொடுதிரையில் சுற்றி மின்புலமானது அமைக்கப்பட்டிருக்கும். திரையில் சிறு சிறு துவாரங்களில் மின்னாற்றல் சேமிக்கப்பட்டிருக்கும். நீங்கள் கை வைக்கும் போது சிறிய அளவிலான மின் ஆற்றலானது உங்களுடைய உடலுக்குள் பாயும் இந்த மின்னாற்றல் உங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் அதே நேரம் திரையில் காணப்படும் மின்னழுத்தத்தில் மிகப்பெரிய வேறுபாட்டை ஏற்படுத்தும், மின்புலத்திலும் மாற்றத்தை உண்டாக்கும். இந்த மாற்றத்தை கண்டறிந்து கொள்ளும் உணர்விகள்(sensors) அதற்கு ஏற்ற சமிக்ஞைகளை அனுப்புகிறது.

அவற்றைக் கொண்டு நாம் எந்த கட்டளையை பிறப்பித்து இருக்கிறோம் என்பதை கண்டறிந்து, அதற்கு ஏற்ப வேலை நடத்தப்படுகிறது. இத்தகைய தொடுதிரைகளில் உங்களுக்கு 90 சதவிகித அளவிலான ஒளி வெளியீடானது கிடைக்கிறது. எனவே முன்பு பார்த்த மின்தடை அடிப்படையிலான தொடுதிரையை காட்டிலும், இதில் தெளிவான படத்தை காண முடியும். அதற்கு ஏற்றார் போல இதன் விலை ஆனது மின்தடை அடிப்படையிலான தொடு திரையை விட சற்றே அதிகமானதாகும்.

ஆனால்,இந்த தொடுதிரையில் உங்களால் விரலை வைத்து மட்டுமே பயன்படுத்த முடியும். அதற்கு மாறாக பிளாஸ்டிக் குச்சியை வைத்தால் எல்லாம் வேலை செய்யாது. முன்பு குறிப்பிட்ட தொடுதிரையில் மின் கடக்காத பொருட்களை பயன்படுத்தலாம்

ஆனால் இந்த தொடுதிரையில் மின் கடத்தும் பொருட்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது கவனிக்கத்தக்கது.

அடுத்ததாக நாம் பார்க்க இருக்க கூடிய தொடுதிரை வகையானது ஒலிஅலை வடிவிலான தொடுதிரை(surface acoustic touch screen)ஆகும்.

இத்தகைய தொடுதிரையில் x அச்சு மற்றும் y அச்சில் முறையே மீயோலி அலைகளை உருவாக்க கூடிய அமைப்பு(ultra sonic sound generator) மற்றும் அவற்றை வாங்கக் கூடிய அமைப்பு(receiver) ஆகியவை இருக்கும். இத்தகைய தொடுதிரைகளை நீங்கள் தொடவே வேண்டாம்.அதற்கு மேலாக கைகளை கொண்டு சென்றாலே மேலே அமைக்கப்பட்டு இருக்கும் உணர்வுகளின் மூலம் ஒலி கதிர்களில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து, அதிலிருந்து கட்டளைகளைப் பெற்று செயல்பட தொடங்கும். ஆனால் இத்தகைய தொடுதிரையின் விலை சற்றே அதிகம் தான்.

இத்தகைய தொடுதிரையில் நேரடியாக ஒளித்திரையில் இருந்து வெளிப்படும் அனைத்து ஒளியும் நேரடியாக வெளியீடாக கிடைக்கிறது(100% light output). ஏனெனில் இதற்கு மேலே எந்தவித தொடுதிரையும் ஒட்டப்படவில்லை. நேராக மீ ஒலி அலைகளைக் கொண்டு இயங்குகிறது.

ஏதோ எளிமையாக தொடுகின்ற மொபைல் தொடுதிரை என்று சொல்லுகிறீர்களே! அதற்கு பின்னால் இப்படி ஒரு அறிவியல் ஒளிந்திருக்கிறது. வெறும் தொடுதிரைக்கு மட்டும் தான் இந்த விளக்கம் அதற்கு உள்ளே செயல்படக்கூடிய அமைப்புகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்றால்! மொபைல் திரை எலக்ட்ரானிக் என்று சிறு தொடர் எழுத வேண்டி இருக்கும்.

ஒருவேளை வாசகர்கள் விருப்பப்பட்டால், நிச்சயம் அது தொடர்பாகவும் ஒரு தொடர் எழுத காத்துக் கொண்டிருக்கிறேன். மேலும் நீங்கள் ஆவலோடு எதிர் நோக்கும் லாஜிக் கதவுகள் தொடர்பான அடுத்த கட்டுரை வரும் நாட்களில் வெளியாகும்.

மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.

உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது. மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையில் உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின்மடல் : srikaleeswarar@myyahoo.com

இணையம்: ssktamil.wordpress.com

,

https://kaniyam.com/how-does-touch-screens-work-in-tamil/

#basicElectronics #dailyElectronics #digitalElectronics #electronics

2025-01-24

என்னதான் விதவிதமாக ஸ்மார்ட் கடிகாரங்கள், டிஜிட்டல் கைக்கடிகாரங்கள் என வந்தாலும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை ஜப்பான்காரன் அறிமுகப்படுத்திய குவார்ட்ஸ்(Quartz) கடிகாரங்களுக்கு மதிப்பு குறைவதில்லை.

இந்த கடிகாரத்தில் இருந்து வரும் டிக்,டிக் சத்தத்திற்காகவே, இதை வாங்கி கைகளிலும் வீட்டின் சுவரிலும் மாட்டிக் கொள்ளும் அன்பு உள்ளங்கள் நாடெங்கும் நிறைந்து காணப்படுகிறார்கள்.

இந்த குவார்ட்ஸ் கடிகாரம் எப்படி தான் வேலை செய்கிறது? எளிமையாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இதற்கு முன்பாக என்னுடைய இன்னபிற எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

kaniyam.com/category/basic-electronics/

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் ஆரம்பக் கட்டுரைகளில் பீசோ(piezo electric effect)எலக்ட்ரிக் விளைவு குறித்து விவாதித்திருந்தோம். உண்மையில், இதே பிசோ எலக்ட்ரிக் விளைவின் அடிப்படையில் தான் குவார்ட்ஸ் கை கடிகாரங்கள் இயங்குகிறது.

இதன் அடிப்படை என்னவென்றால் குவார்ட்ஸ் படிகத்திற்கு மின்னழுத்தத்தை வழங்கும்போது, வினாடிக்கு 32,768 தடவை அதிர்வுருகிறது(Quartz crystals vibratesof 32, 768times per second).

இந்த அதிர்வானது நிலையானதாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு வினாடியை கணக்கிட்டு விட முடியும். நீங்கள் வாங்கும் கடிகாரத்தில் போடப்பட்டிருக்கும் சுண்டு விரல் நகம் அளவிலான பேட்டரியில் இருந்து, போதுமான மின்னழுத்தமானது குவார்ட்ஸ் படிகத்திற்கு வழங்கப்படுகிறது.

நான் கீழே படத்தில் காட்டி உள்ளபடி, உலோக உருளை போல இருக்கும் இந்த அமைப்பிற்குள் தான் குவார்ட்ஸ் படிகமானது வைக்கப்பட்டிருக்கும். மேலும், இதனோடு ஒரு தாமிர கம்பி சுருளும் (inductance coil)இணைக்கப்பட்டிருக்கும், குவார்ட்ஸ் படிகத்திலிருந்து வெளியாகும் அதிர்வுகளை கணக்கிட்டு, நேரத்தை சரியாக காட்டுவதற்காக ஒரு சிறிய எலக்ட்ரானிக் சுற்றும்(small electronic circuit)பயன்படுத்தப்படும்.

இந்த எலக்ட்ரானிக் சுற்று குவாட்ஸ் அமைப்பில் இருந்து வெளியாகும் 32,768 அதிர்வுகளை ஒரு வினாடியாக கணக்கிட்டு அதற்கு ஏற்றார் போல கடிகாரத்தின் முற்களை இயக்கும் பற்களுக்கு ஆற்றலை வழங்குகிறது.

இந்த செயல்கள் அனைத்தும் ஒரு வினாடிப் பொழுதுக்குள் நடந்து முடிந்து, வினாடிப் பொழுதை மிகச் சரியாக காட்டுகிறது.

குவார்ட்ஸ் அடிப்படையில் இயங்கும், ஒரு லட்ச ரூபாய் கடிகாரம் முதல் 50 ரூபாய்க்கு கிடைக்கும் கடிகாரம் வரை அனைத்திலும் இதே முறைதான் பின்பற்றப்படுகிறது. குவார்ட்ஸ் கல்லானது, பீசோ எலக்ட்ரிக் படிகம் என அறியப்படுகிறது. இது தொடர்பாக நான் முன்பே குறிப்பிட்டிருந்த, பீசோ எலக்ட்ரிக் விளைவு குறித்த கட்டுரை படித்து பாருங்கள். அதற்கான இணைப்பையும் கீழே வழங்குகிறேன்.

Piezo electric(அழுத்த மின்)விளைவு என்றால் என்ன? |எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதி 13

இதற்கு முன்பாக, இருந்த கைகடிகாரங்களில் சாவி கொடுத்து சுருள் வில்லையை சுருட்டும்போது, ஒரு குறிப்பிட்ட அளவிற்கான நிலைம ஆற்றல் அந்த சுருள் வில்லைக்குள் சேகரிக்கப்படும்.பின்பு ஒவ்வொரு வினாடியும் அந்த ஆற்றல் வெளியேற்றப்பட்டு, முள்ளானது நகரும். ஒரு நாளைக்கு ஒருமுறை அல்லது குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை சாவி கொடுப்பதன் மூலம் மட்டுமே அத்தகைய கடிகாரங்களை இயக்க முடியும். ஆனால் குவார்ட்ஸ் கடிகாரங்கள் பேட்டரியில் இருந்து ஆற்றல் முழுமையாக தீர்ந்து போகும் வரை தொடர்ந்து எவ்வித பிரச்சனையும் என்று இயங்கும். இதில் பாதிப்புகள் மற்றும் பழுதுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

நேரமும் மிகச் சரியாக காட்டப்படும். மேலும் எடையும் குறைவாக இருக்கும். தற்காலத்தில் குவார்ட்ஸ் கடிகாரங்களின் மீதான மோகம் குறைந்து பெரும்பாலானோர் ஸ்மார்ட் கடிகாரங்களை நோக்கி செல்வதை கவனிக்க முடிகிறது. தற்காலத்தில் அத்தகைய கடிகாரங்களில் பல்வேறு வசதிகளும் வழங்கப்படுகிறது.

ஆனால், நீங்கள் நேரத்தை மட்டும் முக்கியமாக கருதும் நபராக இருந்தால், உங்களுக்காகவே இன்னும் கோடிக்கணக்கான குவார்ட்ஸ் கடிகாரங்கள் காத்துக் கொண்டிருக்கிறது. சாமானியர்கள் வாங்கும் விலை தொடங்கி ஆடம்பரத்திற்காக பணக்காரர்கள் அணியும் வரை அனைவர் கைகளையும் அழகு பார்க்க தவறுவதில்லை! இந்த குவார்ட்ஸ் கடிகாரங்கள்.

இத்தகைய அற்புதமான குவார்ட்ஸ் கடிகாரங்களின் இயக்கவியல் குறித்து ஓரளவுக்கு அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.

மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, நாகர்கோவில் – 02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின்மடல் : srikaleeswarar@myyahoo.com

இணையம்: ssktamil.wordpress.com

https://kaniyam.com/how-does-quartz-watches-work/

#basicElectronics #dailyElectronics #electronics

2025-01-19

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு வகையிலான தலைப்புகள் குறித்து பார்த்திருக்கிறோம். கடந்த சில வாரங்களாக லாஜிக் கதவுகள் குறித்த தொடர் ஒன்றை தொடங்கியிருந்தேன்.

வாரந்தோறும் லாஜிக் கதவுகளையே எழுதி சற்றே சோர்ந்து போய் விட்டேன். இந்த முறை சற்று மாற்றாக இருக்கட்டும் என்று, led பல்புக்குள் எத்தகைய எலக்ட்ரானிக்ஸ் பொதிந்து இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம். அதற்காக லாஜிக் கதவுகள் தொடர் இத்தோடு முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் ! வரும் நாட்களில் லாஜிக் கதவுகள் தொடர்பாகவும் கட்டுரைகள் வெளியாகும்.

தற்காலத்தில் நூறு ரூபாய்க்கு உள்ளாகவே எல்இடி பல்புகளை வாங்கி விட முடியும். குண்டு பல்புகள் என அனைவராலும் அன்போடு  அழைக்கப்படும் டங்ஸ்டன் இழை பல்புகளை பார்க்கும் போது, அவற்றிற்குள் பெரியதாக வேறு எதுவும் இருக்காது. கண்ணாடி குடுவை போன்ற அமைப்பு உள்ளே, இரண்டு கம்பிகள் நீட்டிக்கொண்டு இருக்க, நடுவில் மெல்லியதாக டங்ஸ்டன் இழை இருக்கும்.குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு வெப்பம் அதிகமாகி, டங்ஸ்டன் இழை விட்டுப் போனால் பல்பை தூக்கி தூர போட வேண்டியதுதான்.

ஆனால், எல் இ டி பல்புகளின் கதை அப்படி கிடையாது ! நீங்கள் led பல்புகளை திறந்து பார்த்தால் ஏதோ தட்டையான வட்ட வடிவில் எல்இடி தகடுகள் பொருத்தப்பட்டு இருக்கும்.

எல்இடி பல்பின் வெளிச்சம் மற்றும் வாட் திறனுக்கு ஏற்ப இந்த சிறிய எல்இடி விளக்குகளின் எண்ணிக்கை மாறுபடும். அதற்கும் உள்ளே பிரித்துப் பார்த்தால், ஒரு சிறிய எலக்ட்ரானிக் சுற்று காணப்படும்.

அந்த சுற்றுக்குள் சுமார் 45 பொருட்கள் அடங்கி இருக்கும். அவை, எவை?எவை? அவற்றால் என்ன பயன்? என்பதை பற்றிதான் இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கவிருக்கிறோம்

1) மின்மாற்றி

ரோட்டு ஓரங்களில் மட்டும் தான் டிரான்ஸ்பார்மர் இருக்க வேண்டும் என்று நினைத்துக் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் இருக்கும் எல்இடி பல்புகளுக்குள்ளும் டிரான்ஸ்பார்மர் இருக்கிறது.

இவற்றின் பயன்பாடு என்னவென்றால் வரக்கூடிய 230 வோல்ட் மின்னழுத்தம் கொண்ட மின்சாரத்தை குறைத்து, 10 அல்லது 15 வோல்ட் மின்னழுத்தமாக(stepdown transformer)மாற்றுவது தான். நேரடியாக 230 வோல்ட் மின்னழுத்தத்தை சிறிய எல்இடி தகடுகளுக்கு வழங்கினால், சில வினாடிகளிலேயே புகைந்து(short circuit) போய்விடும்.

பெரும்பாலும் எல்இடி விளக்குகளை உடைத்துப் பார்க்கும்போது, சற்றே பெரியதாக சதுர வடிவில் இருப்பது தான் மின்மாற்றி என்பதே நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதை சுற்றி ஏதாவது ஒரு நிறத்தில் டீப் சுற்றப்பட்டு இருக்கும் ,பிரித்துப் பார்க்கும்போது சிறிய அளவில் தாமிர கம்பிகள் இருக்கும். உண்மையில் எல்இடி விளக்கில் இருக்கும் ஓரளவுக்கு விலை உயர்ந்த பொருள் என்றும் இதைக் குறிப்பிடலாம். அதற்கான புகைப்படத்தை கீழே வழங்கி இருக்கிறேன் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

2) அலை திருத்தி

நம்முடைய ஆரம்ப கால எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளில் பார்த்தது போல, டையோடுகளை கொண்டு மாறுதிசை மின்னோட்டத்தை, நேர்திசை மின்னோட்டமாக மாற்றலாம்(Rectifing AC into DC). பொதுவான எல்இடி விளக்குகள் நேர்திசை மின்னோட்டத்திலேயே(Direct current) இயங்க கூடியது. இதற்கென சிறப்பாக தயாரிக்கப்பட்ட ஒரு மிகச்சிறிய சிப் பயன்படுத்தப்படும். இதைக் கொண்டு அலை திருத்தி பணியானது(Rectification process)மேற்கொள்ளப்படுகிறது. மின்மாற்றியில் இருந்து வரும் வெளியீடானது, இந்த அலை திருத்தியுடன் இணைக்கப்படுகிறது. இந்த அலை திருத்தியின் வெளியீடானது, நேரடியாக led விளக்குகளுக்கு வழங்கப்படும்.

3) மின்னழுத்த தாங்கி

மின்சுற்றுக்குள் அதிகப்படியான மின்னழுத்தம் வரும்போது(High voltage) எளிமையாக சேதமடைந்து விட வாய்ப்பு இருக்கிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு செனார் டையோடு அடிப்படையிலான மின்னழுத்த தாங்கிகள் அல்லது மின்னழுத்த ஒழுங்குபடுத்திகள்(voltage protection chips) பயன்படுத்தப்படலாம். இவையும் மிகச் சிறிய சிப்பு வடிவிலேயே காணப்படும். இவற்றைக் கொண்டு ஒரு குறிப்பிட்ட அதிகப்படியான மின்னழுத்தம் வரை, ஒரே மின்னழுத்த அளவை நிலை நிறுத்த முடியும்.

இதையும் கடந்து, சிறிய அளவிலான மின் தேக்கிகள் அதாவது கெப்பாசிட்டர்கள் கூட பயன்படுத்தப்படலாம். அதிகப்படியான ஆற்றல் வெளியேற்றத்தை(quick discharge )மேற்கொள்ள இவற்றை பயன்படுத்துவார்கள்.

மிகவும் அடிப்படையான எல்இடி விளக்கின் பயன்பாடு இவ்வளவுதான். இவை அனைத்தையும் விலை மலிவாக தயார் செய்து மக்கள் மத்தியில் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்.

பெரும்பாலும் இத்தகைய எல்ஈடி விளக்குகள் செயலிழந்து போவதற்கு அதிகப்படியான மின்னழுத்தம், போதிய பராமரிப்பின்மை மற்றும் நீர்க்கசிவு போன்ற காரணங்கள் தான் முதன்மையானதாக இருக்கும். மேலும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு எல்இடி விளக்குகளில் இருக்கும் அமில பொருட்கள் கசிய தொடங்க வாய்ப்பு இருக்கிறது. இதனால்தான், சற்றே பழைய எல்இடி பல்புகளை உடைத்துப் பார்க்கும்போது ஆங்காங்கே உப்பு திட்டுக்கள் போல காணப்படும். இருந்த போதிலும், தற்காலத்தில் வெளியாகும் எல்இடி பல்புகள் குறைந்தபட்சம் ஓராண்டிற்கு மேல் நீடித்து உழைப்பதை கவனிக்க முடிகிறது. ஆனால் இன்றளவும் கூட 1990 களில் வாங்கிய  டங்ஸ்டன் பல்புகள் இன்றும் பயன்பாட்டில் இருப்பதை கவனிக்காமல் இல்லை.

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நாமும் நம்மை மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும். அடுத்த முறை எல்இடி பல்பு வாங்க போனால், அதில் எந்த அளவிற்கு வாட் திறன் (watt hour)எடுத்துக் கொள்கிறது அதன் லுமென்ஸ் மதிப்பு(lumens value)என்ன என்பதை கவனித்து வாங்குங்கள். எவ்வளவு அதிகமாக லுமேன்ஸ் மதிப்பு இருக்கிறதோ? அப்பொழுதுதான் வெளிச்சம் அதிகமாக இருக்கும். வெறும் வாட் திறனை மட்டும் வைத்து முடிவு செய்துவிட வேண்டாம்.

சரி எல்இடி விளக்குகள் குறித்து எளிமையாக அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன் மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களை சந்திக்கிறேன்.

மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.

உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் :

ssktamil.wordpress.com

https://kaniyam.com/whats-inside-the-led-bulbs-electronics-article/

#basicElectronics #dailyElectronics #electronics

2024-12-26

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்க இருப்பது எலக்ட்ரானிக்ஸ் துறையோடு பின்னிப் பிணைந்து இருக்கும் சில வதந்திகளை பற்றி தான்.

அதற்கு முன்பாக, என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை என்றால், கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

kaniyam.com/category/basic-electronics/

பொதுவாகவே, அதிக விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் தான் தரமானதாக இருக்கும்! எனும் நம்பிக்கை மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது. உண்மையிலேயே, 90களில் விற்கப்பட்ட எலக்ட்ரிக்கல் சாதனங்கள் தற்போதைய பொருளாதாரத்தோடு ஒப்பிடும்போது அதிக விலையிலேயே விற்கப்பட்டன.

என்னுடைய வீட்டில் 1994 ஆண்டு வாங்கப்பட்ட, தொலைக்காட்சி பெட்டியின் அப்போதைய விலை ரூபாய் 6500.

அதே 6500 ரூபாய்க்கு, அன்று அதிகபட்சமாக 15 கிராம் தங்கம் வாங்க முடியும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இத்தனைக்கும் அந்த தொலைக்காட்சி பெட்டியில் 20 இன்ச்சுக்கும் குறைவான திரை தான் வழங்கப்பட்டிருந்தது. தற்பொழுது குறிப்பிடுவது போல, எச்டி 4k, டால்பி என விதவிதமான பெயர்கள் எல்லாம் அப்போதைய தொலைக்காட்சி பெட்டிகளில் இருந்ததில்லை.

கருப்பு வெள்ளை தொலைக்காட்சி பெட்டியின் விலை தான் 6500. அதுவே, கலர் தொலைக்காட்சி பெட்டி வாங்க வேண்டும் என்றால் 10,000 ரூபாயை கடந்திருக்கும் என்று கேட்டு தெரிந்து கொண்டேன்.

ஆனால், தற்காலத்தில் விலைக்கும் தரத்திற்கும் இடையேயான விகிதாச்சாரம் பெருமளவில் மாறுபடுகிறது. தற்காலத்தில், இருக்கக்கூடிய விலை மலிவான எலக்ட்ரானிக் பொருட்கள் கூட அதிகப்படியான நாட்கள் வேலை செய்யக்கூடியதாக இருக்கும்.

கவர்ச்சியாக தொலைக்காட்சிகளில் விளம்பரம் காட்டப்படும், எலக்ட்ரானிக் பொருட்கள் உண்மையிலேயே அந்த விலைக்கு சரியானதா? என்பதை அறிந்து கொள்வது முக்கியமாகிறது.

உதாரணமாக, ஒரு லேப்டாப் தயாரிக்க பத்தாயிரம் ரூபாய் ஆகிறது எனில், அதில் நிறுவன மேம்பாடு,விளம்பரம், அரசாங்க வரிகள் மற்றும் இதர செலவுகள் எல்லாம் சேர்த்து 25 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை விற்பார்கள்.

அதே போன்ற, ஒரு லேப்டாப்பை பெரியதாக விளம்பரம் செய்யாத நிறுவனம் 20,000 கீழே கூட விற்க முடியும்.

எனவே, நீங்கள் எலக்ட்ரானிக் பொருட்களை வாங்கும் போது அவை உண்மையிலேயே நீங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்புடையதா? என்று பார்த்து வாங்குங்கள். அதிக விலை கொடுப்பதால் நீடித்த தரம் இருக்கும் என்பதெல்லாம், அந்த காலத்தோடு கடந்து சென்று விட்டது.

அடுத்ததாக, நம் அனைவரிடமும் தொற்றிக் கொண்டிருக்கும் காலாகாலமான பழக்கம் தான் டிவி ரிமோட்டுகளை அடித்தே சரி செய்வது, இதே போல,லேப்டாப்கள்,கம்ப்யூட்டர்கள் மற்றும் இன்ன பிற எலக்ட்ரானிக் பொருட்களை குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் போல பஞ்ச் கொடுத்து சரி செய்யும் நண்பர்கள் பலரையும் பார்த்திருக்கிறேன்.

தற்காலத்தில் இருக்கக்கூடிய, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் எளிதில் உடையக்கூடியவை.மேலும், அதிகப்படியான கண்ணாடி நூல் இழைகள்(glass fibers) பயன்படுத்தப்படுகின்றன. தவறுதலாக, இந்த கண்ணாடி நூல் இழைகள், உங்களுடைய விரல் நகங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டால் பின்னாலில் மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மேலும், பேட்டரியுடன் கூடிய எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் இவ்வாறு அதிக அழுத்தம் கொடுக்கும் போது, வெடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எவ்வளவு பெரிய வெள்ளத்தில் சிக்கினாலும், பொருளை வெயிலில் காய வைத்து எடுத்தால் போதும்! நன்றாக வேலை செய்யும் எனும் நம்பிக்கை இன்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையை சுற்றி வருகிறது.

அடிப்படையில், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை நேரடியாக சூரிய ஒளியில் வைப்பது பழுதுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

மேலும், பேட்டரி போன்ற சாதனங்கள் எளிதில் தீப்பிடித்து வெடிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

நான் பேட்டரியை தவிர மீதமுள்ள எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை வெயிலில் வைக்கலாமே! என்று நீங்கள் சொன்னால், பேட்டரியோடு ஒப்பிடக்கூடிய, மின் தேக்கிகளும் (capacitors) எலக்ட்ரானிக் சுற்றுகளில் பயன்படுத்தப்படுகின்றன. அவை, உங்கள் கண்களில் புலப்படுவதற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு.

எனவே கதிரவனின் ஒளியில் அமர்ந்தால், மனிதர்களுக்கு வேண்டுமானால் விட்டமின் சத்துக்கள் கிடைக்கலாம்! எலக்ட்ரானிக் கருவிகளுக்கு,அது பாதகமாகவே அமையும்.

மற்றும் ஒரு பிரபலமான வதந்தி ஆப்பிள் போன்களில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது! என்று பலரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.

ஆம்! உண்மையிலேயே ஆப்பிள் போன் மட்டுமல்ல! 50 ரூபாய்க்கு கிடைக்கும் விளையாட்டு ஃபோன்களில் கூட தங்கம் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது.

குறை கடத்தித் துறையில் தங்கமும் பயன்படுத்தப்படுகிறது. விலை உயர்ந்த எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில், மா சூட்டலுக்காக குறிப்பிட்ட அளவு தங்கம் பயன்படுத்தப்படலாம்! விலை குறைந்த எலக்ட்ரானிக்ஸ் கருவிகளில் கூட அவற்றின் தேவைக்கு ஏற்ப, விலைக்கு ஏற்ப தங்கம் பயன்படுத்தப்படலாம்.

அதற்காக, ஆப்பிள் போனில் இருக்கும் தங்கத்தை எடுத்து புதியதாக ஆடி கார் எல்லாம் வாங்கி விட முடியாது.

ஒரு கிராம் அளவிலான தங்கத்தை பிரித்து எடுப்பதற்கு உங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் வரை செலவாகும். மேலும், அதற்கு சில நேரங்களில் நூற்றுக்கணக்கான மொபைல் போன்கள் கூட தேவைப்படும்.

சரி! கட்டுரையின் இறுதி பகுதியை நெருங்கி விட்டோம். கடைசியாக, மொபைல் போன் கேமராக்களில் குறிப்பிடப்படும் மிக முக்கியமான வதந்தியை தான் கவனிக்க வருகிறோம்.

அதிக கேமராக்கள் இருந்தால், படம் தெளிவாக தெரியும். அதிக மெகாபிக்சல்(mega pixel) என குறிப்பிடப்பட்டிருந்தால், எடுக்கப்பட்ட புகைப்படம் நாசா சேட்டிலைட்டுக்கு இணையாக இருக்கும். என்றெல்லாம், தொலைக்காட்சியில் விளம்பரம் வந்து பார்த்திருப்பீர்கள்.

கேமரா லென்ஸ்  அளவு, அது தயாரிக்கப்பட்டு இருக்கக்கூடிய மூலப் பொருட்கள் மற்றும் கேமராவில் பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடிய சென்சார் ஆகியவற்றின் அடிப்படையில்  புகைப்படத்தின் தரம் தீர்மானிக்கப்படுகிறது

விளம்பரத்திற்காக, ஒன்றல்ல இரண்டல்ல போனுக்கு பின்னால் 20 கேமராவை கூட வைப்பார்கள்.

இவ்வளவு நாள், பார்த்த கட்டுரைகளிலேயே சற்றே வித்தியாசமாக இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன்.

மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின், தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

https://kaniyam.com/electronics-myths/

#basicElectronics #dailyElectronics #electronics

2024-12-16

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், அடுத்த கட்டுரையிலிருந்து லாஜிக் கதவுகள் தொடர்பாக ஒரு குறுந்தொடர் கட்டுரையை எழுதலாம் என முடிவு செய்திருக்கிறேன்.

அந்த கட்டுரையை தொடங்குவதற்காக, சிறிது காலம் தகவல்களை முறையாக திரட்டி வருகிறேன்.

இருந்த போதிலும், வாரந்தோறும் எழுதும் கட்டுரையை தொடர வேண்டும் எனும் நோக்கில் இன்றைக்கு எதைப்பற்றி எழுதலாமென நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுதுதான், பயன்படுத்தாமல் தூக்கிப்போட்டிருந்த ஒரு பழைய multi pin plug கிடைத்தது.

பொதுவாக, நம் அனைவரின் வீட்டிலும் பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான பொருள். டிவி மற்றும் செட்டாப் பாக்ஸுக்கு வழங்க, ஒரே ஒரு மின் இணைப்பு சாக்கிட் மட்டுமே வீட்டில் இருக்கும். அந்த நேரங்களில், இது போன்ற ஒரு மல்டிபிளக்கை வாங்கி நடுவில் இருப்பதில் டிவியின் நினைப்பையும் மேற்புறமாக செட்டாப் பாக்ஸின் இணைப்பையும் வழங்கும் பல நபர்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

மேலும், ஒரே நேரத்தில் இரண்டு மொபைல் போன்களை சார்ஜ் செய்வதற்கு கூட இவற்றை பயன்படுத்த முடியும்.

எங்கள் வீட்டில் கூட கடந்த 40 ஆண்டுகளாக, இன்னும் செயல்படு வகையில் ஒரு மல்டிபிளக்ஸ் இருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

அடிப்படையில், இவை எவ்வாறு வேலை செய்கின்றன. நம் அனைவர் வீட்டிலும் சுமார் 16 ஆம்பியர் வரை மின்சாரம் வருகிறது.

நாம் அனைவருக்கும் தெரியும், மின்னோட்டத்தின் அளவு தான் ஆம்பியர் .

நிறைய பேர் மின்னழுத்தம் மற்றும் மின்னோட்டத்திற்கு இடையே குழப்பம் அடைகிறார்கள்.

நான் கீழே குறிப்பிடுகிற வாசகத்தை சரியாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்! இனிமேல் குழப்பம் ஏற்படாது.

குறுக்கு வழியில் மின்னழுத்தம் சமமாக இருக்கும். நேர்வழியில் மின்னோட்டம் சமமாக இருக்கும்.

நேராக இருக்கக் கூடிய ஒரு கடத்தியில், மூன்று மின் விளக்குகள் தொடர்வரிசையாக இணைக்கப்பட்டிருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள்.

முதலாவது, மின் விளக்கிற்கு அதிக மின் அழுத்தம் கிடைக்கும். அதுவே, மூன்றாவது மின் விளக்கிற்கு குறைவான மின் அழுத்தமே(potential drop)கிடைக்கும்.

காரணம், தொடர்பு வரிசையின் போது மின்னழுத்தம் பகிர்ந்து  வழங்கப்படுகிறது அல்லது போகப் போக குறைகிறது.

ஆனால், அதே நேரம் மூன்று மின் விளக்கிற்கும் ஒரே அளவிலான மின்னோட்டமே கிடைக்கும். இந்த செயல்பாடுகள் கொஞ்சம் குழப்புவதாக இருந்தால், நம்முடைய முதலாவது கட்டுரைகளை படித்துவிட்டு இந்த கட்டுரையை படியுங்கள்.

நம்முடைய, இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளின் இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது.

kaniyam.com/category/basic-electronics/

அதேநேரம், இணை மின்சுற்றில் மூன்று மின்விளக்குகள் இணைக்கப்பட்டு இருக்கும் பட்சத்தில் அந்த மூன்று மின் விளக்குகளுக்கும் ஒரே அளவிலான மின் அழுத்தமே கிடைக்கும் அதே நேரம் மின்னோட்டமானது மூன்று பாகங்களாக பிரியும்.

இதை விளக்கும் விதமாக கீழே படங்களை இணைத்து இருக்கிறேன்.

இந்த அடிப்படையில் தான், நான் முன்பு குறிப்பிட்ட மல்டிபின் சாக்கட்டுகள் செயல்படுகின்றன. அதாவது, உதாரணத்திற்கு நீங்கள் இத்தகைய ஒரு மல்டிபின் சாக்கெட்டில் மூன்று தொலைக்காட்சி பெட்டிகளை இணைத்து இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

உதாரணமாக, ஒவ்வொரு தொலைக்காட்சி பெட்டியும் சுமார் இரண்டு ஆம்பியர் மின்சாரத்தை பயன்படுத்துகிறது என்றால், எவ்வித பிரச்சனையும் கிடையாது.

மூன்று தொலைக்காட்சி பெட்டிகளையும் ஒரே நேரத்தில் ஒரே இணைப்பின் மூலம் பயன்படுத்திவிட முடியும்.

இங்கே மல்டி பின் பிளக் என்பது, இணை மின்தொடர் அடிப்படையில் செயல்படுகிறது.

எனவே, மூன்று தொலைக்காட்சி பெட்டிகளுக்கும் முறையை 220 வோல்டு அளவிலான மின்னழுத்தம் சமமாக கிடைக்கும். அதேநேரம், மூல இணைப்பில் இருந்து வரக்கூடிய 6 ஆம்பியர் மின்சாரமானது மூன்று தொலைக்காட்சி பெட்டிகளுக்கும், தலா இரண்டு ஆம்பியர் என பகிர்ந்து அளிக்கப்படும்.

ஆனால், நீங்கள் மூன்று தொலைக்காட்சி பெட்டிகளுக்கு பதிலாக, ஒன்றில் இன்டக்சன் அடுப்பையும், இன்னொன்றில் குளிர்சாதன பெட்டியையும், மூன்றாவது இணைப்பில் சலவை இயந்திரத்தையும் இணைத்தால் ஒட்டுமொத்தமாக தீபாவளி கொண்டாட வேண்டியதுதான்.

எப்பொழுது இணைப்பின் அளவானது பத்து ஆம்பியரை கடக்கிறதோ! அப்பொழுதே வெப்பம் அதிகமாக தொடங்கி விடும். உதாரணமாக, குளிர்சாதனப்பெட்டி மட்டுமே பத்து ஆம்பியர் அளவில் மின்சாரத்தை எடுத்துக் கொள்ளும். இத்தகைய, சூழலில் ஒட்டுமொத்தமாக தீ விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

இது ஏதோ சாதாரண தவறு போல தெரியலாம். ஆனால், இதைத்தான் அறிந்தும்,அறியாமல் நம்மில் பலரும் செய்து வருகிறோம்.

அவசரத்திற்கு வேலை செய்வதாக நினைத்துக்கொண்டு, இதுபோன்ற மல்டிபின் சாக்கெட்டுகளை தவறாக பயன்படுத்துவது எப்பொழுதும் பிரச்சனையே கொடுக்கும்.

மேலும், இவற்றில் இரண்டிற்கும் மேற்பட்ட மின்சாதன கருவிகளை இணைக்கும் போதே, கம்பிகள் அதிகமாக வெப்பமடைய தொடங்கும். மேலும், பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டிருக்கும் இவை எளிதில் உருகி தீ விபத்து ஏற்படக்கூட அதிகப்படியான வாய்ப்பு இருக்கிறது.

மேலும், திடீரென்று அதிகப்படியான மின்னழுத்த வேறுபாடு ஏற்படும்போது உங்களுடைய மின்சார கருவிகள் ஒட்டுமொத்தமாக சேதம் அடைய வாய்ப்பு இருக்கிறது.

எனவே, சிறு சிறு தேவைகளுக்கு மட்டுமே மல்டிப் பின் பிளக்குகளை பயன்படுத்துங்கள்! மாறாக,  மிகப்பெரிய கருவிகளை இணைத்தால் கருகிப் போவதுதான் மிச்சம்.

மேற்படி, இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும். உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

https://kaniyam.com/multi-pin-pulgs-working/

#basicElectronics #dailyElectronics #electronics

2024-12-06

இன்றைக்கு, நம்முடைய எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியின் 25 ஆவது கட்டுரையில் அடி எடுத்து வைத்திருக்கிறோம். அடிப்படையில,  எலக்ட்ரானிக்ஸ் துறை தொடர்பாக எவ்வித முன் அனுபவம் இல்லாமல் என்னால் தொடங்கப்பட்ட இந்த எலக்ட்ரானிக்ஸ் தொடரானது, தற்பொழுது 25வது கட்டுரையை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது.

இதற்கு ஆக்கமும்,ஊக்கமும் அளித்த அனைவருக்கும் மற்றும் வாசகப் பெருமக்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த எளியவனின் பயணம் மென்மேலும் தொடரும்.

என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க விரும்பினால், கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

தொடர்ந்து பல எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் குறித்தும், நாம் கட்டுரைகளில் படித்து வருகிறோம். நமது கணியம் அறக்கட்டளையின் இணையதளத்திலேயே மின்கலன்கள் குறித்து திரு.இரா.அசோகன் அவர்கள் எழுதி வருகிறார்கள்.

நான் பெரும்பாலும், எலக்ட்ரானிக்ஸ் பகுதியில் மின்கலன்கள் குறித்து எழுதியது கிடையாது. ஆனால், தற்பொழுது தினம் தோறும் செய்திகளில் வெடிக்கும் பேட்டரிகள் என தலைப்புகள் வைத்து பரபரப்பு செய்திகள் வெளியிடப்படுவதை அடிக்கடி கவனிக்க முடிகிறது.

இரவோடு,இரவாக சார்ஜ் செய்யப்பட்டு இருந்தும் மொபைல் போன் பேட்டரி வெடித்து மாணவர் பலி. கையில் வைத்துக் கொண்டிருந்த மொபைல் போன் வெடித்து, உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மாணவிக்கு மருத்துவமனையில் அனுமதி என தினம் தோறும் படித்து வருகிறோம்.

இந்த கட்டுரையில் பேட்டரிகளின் செயல்பாடு விதம் குறித்து,நாம் பெரிய அளவில் விவாதிக்கப் போவதில்லை. அது குறித்து நீங்கள் படிக்க விரும்பினால், கணியம் அறக்கட்டளையில் வெளியாக கூடிய மின்கலன்கள் தொடர்பான திரு. இரா அசோகன் அவர்கள் எழுதும் தொடரை பார்வையிடுங்கள்.

சரி! நம்முடைய கேள்விக்கு வருவோம்! எதனால் பேட்டரிகள் வெடிக்கிறது? பேட்டரிகள் வெடிப்பதற்கு நூற்றுக்கணக்கான காரணங்கள் இருக்கின்றன.

தொடக்கத்திலேயே புதிர் போடுகிறேன் என யோசித்து விட வேண்டாம்! உண்மையிலேயே ஒரு பேட்டரி இதனால்தான் வெடிக்கிறது என குறிப்பிட்டு விட முடியாது.

தற்காலத்தில், லித்தியம் அடிப்படையிலான பேட்டரிகளில் மொபைல் போன்களில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

லித்தியம் அயன் பேட்டரி மற்றும் லித்தியம் பாலிமர் பேட்டரி ஆகியவை தான் நாம் அடிக்கடி கேட்கக்கூடிய பெயர்களாக இருக்கின்றன.

இந்த இரண்டு வகையான பேட்டரிகளுமே எளிதில் தீப்பிடிக்கக் கூடியவை. ஆம்! இவற்றின் மேல் இருக்கக்கூடிய பாதுகாப்பு உறையானது நீக்கப்படும் போது, இவை எளிமையாக தீப்பிடித்து விடுகின்றன.

வளிமண்டல காற்றோடு நேரடியாக வினை புரியும் போது, எளிமையாக தீப்பற்றக்கூடிய பொருளாகவே லித்தியம் பேட்டரிகள் அறியப்படுகின்றன.

ஆகவே! பழைய பேட்டரிகளை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவது சிறப்பு.

அடுத்தபடியாக எழக்கூடிய மிக முக்கியமான பிரச்சனை, தரம் குறைந்த பேட்டரிகளை வாங்குவது. உங்களுடைய மொபைல் போனில் ஏற்கனவே பயன்படுத்தி வந்த பேட்டரியில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு, அதை நீங்கள் சரி செய்ய முற்பட்டால், சரியான மற்றும் பொருத்தமான பேட்டரியை தேர்வு செய்ய வேண்டும்.

500 ரூபாய்க்கு கிடைக்கிறது! மற்றும் முந்தைய பேட்டரியை விடவும் அதிக நேரம் பயன்படுத்தலாம் என கடைக்காரர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு,ஏதோ ஒரு பேட்டரியை வாங்கி மொபைல் போனில் போட்டு விடாதீர்கள்.

முன்புள்ள மொபைல் போன்களைப் போல தற்போது பேட்டரிகளை கழற்ற கூட முடியாது.எனவே, உள்ளே வெப்பமாகும் பட்சத்தில் நீங்கள் கவனிக்காமலேயே உங்கள் கைகளில் இருந்தே வெடிக்கின்ற அபாயம் இருக்கிறது.

அதேநேரம், ஒரு மொபைல் போனில் பேட்டரி மாற்றி சில நாட்களிலேயே பேட்டரியில் பிரச்சனை ஏற்படுகிறது என்றால்! உங்கள் மொபைல் போனின் இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கவனிப்பது சிறப்பு. ஏனெனில், உங்களுடைய மொபைல் போனின் எலக்ட்ரானிக் அமைப்புகளில் ஏற்படும் ஏதாவது பிரச்சனையின் காரணமாக கூட, உங்கள் மொபைல் ஃபோனின் பேட்டரியில் பிரச்சனையை ஏற்படக்கூடும்.

இதற்காகத்தான், பொதுவாகவே அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களுக்கு சென்று சரி பார்த்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும், உங்களுடைய மொபைல் போனுக்கான சார்ஜரை மட்டுமே பயன்படுத்துங்கள். என்னுடைய நண்பர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனுக்கு, வேறு ஒரு நிறுவனத்தின் 90 வாட் அளவிலான சார்ஜரை பயன்படுத்தியதாகச் சொன்னார்.

மேற்படி, அவர் பயன்படுத்தக்கூடிய மொபைல் போனின் பேட்டரி தாங்கக்கூடிய மின்சாரத்தின் அளவு வெறும் 18 வாட் தான்.

இதனால், கைக்கு வந்து சில நாட்களே ஆன மொபைல் போனின் பேட்டரி, காற்றடைத்த பலூன் போல பெரிதாகிவிட்டது கவனிக்க முடிகிறது.

மேலும், இத்தகைய தவறான மின் ஆற்றல் குறியீடு(wrong power rating) கொண்ட சார்ஜர்களை பயன்படுத்தும் போது, மொபைல் போனில் உள்ள எலக்ட்ரானிக் அமைப்புகளும் பாதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக ஏற்படக்கூடிய மிக முக்கியமான, பிரச்சனை மொபைல் போன்கள் தண்ணீரில் விழுவது. உங்கள் மொபைல் போனிற்குள் தண்ணீர் சென்றிருக்கிறது! என்று உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அதை சர்வீஸ் செய்து விடுவது பரிந்துரைக்கப்படுகிறது.

ஒருவேளை, உங்களுடைய மொபைல் போனில் சிறந்த தண்ணீர் தடுப்பு அமைப்பு இருந்தாலும்(water resistant) கூட, அதிகப்படியான தண்ணீர் உள்ளே நுழையும் போது பேட்டரிகளின் மின் முனைகளின் இடையே நேரடியாக இணைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அடுத்தபடியாக, உங்களுடைய மொபைல் போன்கள் கையில் இருந்து கீழே விழுந்து உங்கள் கண்களுக்கு தெரியும் படியாக வெளியில் சேதம் ஏற்பட்டு இருந்தால், உடனடியாக அந்த மொபைல் போனை சர்வீஸ் செய்து விடுவது நல்லது.

இதன் காரணமாக கூட, மொபைல் பேட்டரியின் இணைப்புகளில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம். ஒழுங்காக மின்னாற்றல் செல்லாமல், பேட்டரி பெரிதாகி வெடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

நண்பர்கள் பலரும், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச் போலவே, வெறும் 500 ரூபாய்க்கு கிடைக்க விடக்கூடிய போலி வாட்சை வாங்கி, கைகளில் கட்டிக்கொண்டு அலைவதை பார்க்க முடிகிறது.

தயவு செய்து, இது போன்ற போலியான மற்றும் முறையான நிறுவனத்தால் தயாரிக்கப்படாத எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்தாதீர்கள்.

அதனுள் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பேட்டரிகள் மிகவும் குறைந்த தரத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கும். நீங்கள் அதை சரியாக பராமரிக்காவிட்டால், கையில் இருந்தே வெடிக்க கூடிய அபாயம் இருக்கிறது.

இதே வரைமுறையானது, காதில் பயன்படுத்தக்கூடிய இயர்போன்களுக்கும் பொருந்தும்.

என்னிடம் கேட்கப் போனால், பேட்டரிகள் இல்லாத சாதாரண கம்பி இயர்போன்களை(normal wired earphones)பயன்படுத்துவது சிறப்பானது.

மேலும், உங்களுடைய மொபைல் போன் திரையில் வழக்கத்திற்கு மாறாக அழுத்தம் அதிகமாக இருப்பதாக, நீங்கள் உணர்ந்தால் உடனடியாக கவனிப்பது சாலச் சிறந்தது. பேட்டரி பெரிதாகி வருவதன் காரணமாகத்தான் இத்தகைய அழுத்தம் ஏற்படும்.

இவற்றுக்கெல்லாம் மேலாக ,நம்மை விட்டு இன்னும் நீங்காத ஒரு கெட்ட பழக்கம் விடிய விடிய மொபைல் போனுக்கு சார்ஜ் போடுவது!

ஓவர் நைட்டில் ஒபாமா ஆவது போல, நீங்கள் இப்படி ஓவர் நைட்டாக சார்ஜ் போடும்போது, உங்கள் வீட்டிலேயே ஒரு ரெடிமேட் வெடிகுண்டை தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள்! என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும், மொபைல் ஃபோன்களுக்கு இறுக்கமான கவசங்கள்(mobile cases)அணிவதையும் தவிர்க்கவும்.

அதேபோல, மொபைல் கவசங்களுக்கு உள்ளே உங்கள் வீட்டிற்கு தெரியாமல் பணத்தை ஒழித்து வைப்பதையும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அப்படி வெப்பம் அதிகமானால், முதலில் தீ பிடிப்பது ரூபாய் தாளாகத்தான் இருக்கும்.

எனக்குத் தெரிந்த பெரும்பாலான பாதுகாப்பு வழிகளை, இங்கே உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

மேலும், மொபைல் போன் சார்ஜ் செய்து கொண்டிருக்கும்போதே பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டியது முக்கியமானது..

அனைவரும் பாதுகாப்பாக பயன்படுத்துங்கள்! உங்கள் குடும்பத்தினருக்கும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மேலும், உங்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் தெரிந்திருந்தால், தயங்காமல் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேற்படி, இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரியை அணுகவும்.

மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையில் சந்திக்கலாம்.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

https://kaniyam.com/battery-safety-regulations/

#awareness #basicElectronics #battery #dailyElectronics #electronics

2024-11-30

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்படக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் கருவிகளின் செயல்முறை குறித்து கடந்த சில கட்டுரைகளாக பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், இன்றைக்கு நாம் பார்க்கக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் பொருள், தற்காலத்தில் அனைவர் வீட்டிலும் குடிகொண்டு விட்ட டிஜிட்டல் தெர்மாமீட்டர் பற்றி தான்.

இன்றைக்கு கையில் கட்டி இருக்கக்கூடிய ஸ்மார்ட் வாட்ச் முதல் வீட்டில் இருக்கும் ஓவன் வரை தெர்மாமீட்டர்களோடு இணைந்து வருகின்றன.

அதையும் கடந்து, நமக்கு நாமே மருத்துவர்களாக மாறிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில், பெரும்பாலானோர் வீட்டில் 100 ரூபாய்க்கு உள்ளாக கிடைக்கக்கூடிய சிறிய தெர்மாமீட்டர்களை பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது.

இதுகுறித்து விரிவாக பார்ப்பதற்கு முன்பாக, என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் படிக்கவில்லை! என்றால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

kaniyam.com/category/basic-electronics/

அடிப்படையில், இந்த தெர்மாமீட்டர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று, மருத்துவ நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் தெர்மாமீட்டர், மற்றொன்று சமையல் மற்றும் வீட்டு தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் தெர்மாமீட்டர்.

மருத்துவ தேவைக்காக பயன்படுத்தக் கூடிய தெர்மாமீட்டரில் சுமார் 93 டிகிரி ஃபாரன்ஹீட் முதல் 108 டிகிரி ஃபாரன்ஹீட் வரை தான் வெப்பநிலையை அளவீடு செய்ய முடியும்.(இந்த குறிப்பிட்ட இடைவெளிக்கு அதிகமாகவோ குறைவாகவோ, மனித உடலில் வெப்பநிலை இருப்பதற்கு வாய்ப்பில்லை)

அதேசமயம், சமையல் மற்றும் இன்ன பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் தெர்மாமீட்டர்களில் 0 முதல் சுமார் 300 டிகிரி பாரன்ஹீட் வரை,  வெப்பநிலையை அளவிடும் வகையில் தயாரிக்கப்படுகிறது

இந்த இரண்டு தெர்மாமீட்டர்களும் இயங்குவது, ஒரே அடிப்படையிலான தத்துவத்தில் தான் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.

நமது ஆரம்ப கால கட்டுரைகளிலேயே மின்தடைகள் குறித்து விவாதித்து இருக்கிறோம். வெப்பநிலையின் காரணமாகவும், மின்தடையின் மதிப்பு மாறுபடும். இவ்வாறு மாறுபடக்கூடிய மின்தடையின் மதிப்பைக் கொண்டு, வெப்பநிலையை நம்மால் கண்டறிய முடியும்.

ஏற்கனவே, குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு எந்த அளவிற்கு மின்தடை மதிப்பு மாற்றம் அடையும் என்பது நமக்குத் தெரியும். அதை அடிப்படையாகக் கொண்டு கணக்கீடு செய்து பார்ப்பதன் மூலமாக, வெப்பநிலைய நம்மால் கண்டறிய முடியும்.

இதற்காக தேர்ந்த வகையிலான தெர்மோ இணைகள் (thermocouple) மற்றும் மின்தடைகள் பயன்படுத்தப்படுவதாக அறிய முடிகிறது. அதனோடு, ஒரு உள்ளார்ந்த மின்சுற்றும் குறிப்பிட்ட வகையில் நிரலாக்கம் செய்யப்பட்ட சிறிய சிப்பும்(programmed chip for calculations) வழங்கப்பட்டிருக்கும்.

அதற்கு ஆற்றல் அளிப்பதற்கு, மிகச்சிறிய பேட்டரி(coin battery)பயன்படுத்தப்படும். நீங்கள் தெர்மாமீட்டரை ஆன் செய்து, உங்களுடைய உணவின் மீது அல்லது வாயிலோ வைக்கும் போது வெப்பநிலை காரணமாக அங்கு வழங்கப்பட்டிருக்கும் மின்தடையின் மதிப்பில் மாற்றம் ஏற்பட தொடங்கும். அதற்கு ஏற்,  நிரலாக்கம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய உள்ளார்ந்த மின்சுற்றுகள் இந்த மாற்றத்தை கண்டறிந்து அதன் மூலம் வெப்பநிலையை கணக்கிட்டு நமக்கு திரையில் காட்டுகின்றன.

இதற்காக ஒரு எட்டு பிரிவு, ஐந்து இலக்க எல்சிடி திரை(8 segment 5 digit LCD display)வழங்கப்பட்டிருக்கும். இவை அனைத்தையும் தயாரித்து, நூறு ரூபாய்க்குள் கடைகளில் விற்பனை செய்து விடுகிறார்கள்

பாதரச அடிப்படையிலான தெர்மாமீட்டர்களை விடவும், இவை பாதுகாப்பானவை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டிய உள்ளது. பாதரசத்தால் தயாரிக்கப்படும் வெப்பமானிகளில், பாதரச கசிவு ஏற்படும் போது உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

பாயசத்தின் வெப்பநிலையை பார்ப்பதற்கு பாதரச வெப்பநிலை மானி களை விடவும், இந்த டிஜிட்டல் வெப்பநிலைமானிகள் சிறந்ததாக இருக்கின்றன.ஒருவேளை தவறி போய் பாதரசம் கசிந்தால், பாயாசம் பாய்சனாகி ஆகிவிடும்

ஆனால் டிஜிட்டல் வெப்ப நிலை மாநிலங்களில் வைக்கப்பட்டுள்ள மின்தடைகள் அல்லது தெர்மோ இணைகள், மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.

இதில், மேம்படுத்தப்பட்ட வடிவமாக லேசர் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய வெப்பநிலைமானிகளும் இருக்கின்றன.அதுகுறித்து இன்னொரு கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்

இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய, அடிப்படையான செயல்முறை என்பது ஒரு கடத்தியின் மின்தடை மதிப்பில் மாற்றம் ஏற்படும்போது, அதன் குறுக்கே இருக்க கூடிய மின்னழுத்த வேறுபாடும் சீராக மாற்றம் அடைகிறது(மின்னழுத்த வேறுபாட்டிற்கான ஓம் விதி).

இந்த மின்னழுத்த வேறுபாடு மாற்றத்தை கணக்கிடுவதன் மூலமாக, நம்மால் துல்லியமான வெப்பநிலையை அளவிட முடிகிறது. இருந்த போதிலும், பெரும்பாலான மலிவு விலை தெர்மாமீட்டர்களில் 0.5 டிகிரி செல்சியஸ் வரையிலான பிழைகள் இருக்க வாய்ப்பு உள்ளது. ( மிகவும் குறைந்த தரத்திலான தயாரிப்பாக இருந்தால் அதற்கு தோணும் மதிப்புகளை கூட, வெப்பநிலையாக காட்ட வாய்ப்பு இருக்கிறது)

மேலும், இவை பெரும்பாலும் பழுதாகி விட்டால், சரி செய்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு! என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் m

இத்தகைய, தெர்மாமீட்டர்களை பயன்படுத்தி உங்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா? என வீட்டிலேயே மருத்துவம் பார்த்துக் கொள்வது சரியானதாக இருக்காது.

மருத்துவ சூழலில் முறையாக தெர்மாமீட்டர்களை வைத்து பரிசோதித்துப் பார்த்தால்தான், நமது உடலில் இருக்கும் பிரச்சனைகள் வெளியில் தெரியும். வேண்டுமானால் சாம்பார் சூடாக இருக்கிறதா? என்று பார்ப்பதற்கு இத்தகைய தெர்மாமீட்டர்களை பயன்படுத்தலாம்

அப்பொழுதும் கூட கவனமாக இருங்கள்! மறந்து போய் சாம்பாருக்குள் போட்டு விடாதீர்கள்! பிறகு, முருங்கைக்காய்க்கு பதிலாக கரண்டியில் தெர்மாமீட்டர் தான் மிஞ்சும்.

சரி! ஒரு புதிய எலக்ட்ரானிக்ஸ் தகவலை அறிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

மேற்படி, இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால் தயங்காமல் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.

உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

https://kaniyam.com/how-does-electric-thermometers-work/

#basicElectronics #dailyElectronics #electronics

2024-11-27

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

சில கால இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையோடு உங்களை வந்து சந்தித்திருக்கிறேன்.

அடிப்படையில், இன்றைக்கு நாம் பேசப் போகிற பொருள் முழுமையாக எலக்ட்ரானிக்ஸ் துறையை சார்ந்ததல்ல! ஆனாலும், நாம் தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய ஒரு கருவி தான்.

சட்டைகளில் இருக்கக்கூடிய சுருக்கங்களை நேர்த்தியாக நீக்குவதில் முனைவர் பட்டம் பெற்ற, அயர்ன் பாக்ஸ் பற்றிதான் இன்றைக்கு பார்க்க வருகிறோம்.

அடிப்படையில், ஆரம்ப காலத்தில் அயர்ன் பாக்ஸ் கருவிகள் எவ்வாறு இருந்தன? என்பது நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். எடிசன்(அவர் தான? என்பது பெரிய அரசியல்) கண்டுபிடித்த மின்சாரம் வீடுகள் தோறும் எட்டாத காலத்தில், எரிந்தும் எரியாத கரித்துண்டுகளை சூடேற்றி, துணிகளை நேராக்கினார்கள் நம் முன்னோர்கள்.

இன்றளவும், கிராமப்புறங்களில் தேய்ப்பு பெட்டி என அன்பாக அறியப்படும், பித்தளை கொண்டு செய்யப்படக்கூடிய கரித்துண்டுகளால் சூடேற்றப்படும் அயர்ன் பாக்ஸ் பற்றி தான் இங்கு நான் குறிப்பிடுகிறேன்.

இதுபோன்ற, என்னுடைய இன்னபிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க விரும்பினால்! கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

இன்றைக்கு அயர்ன் பாக்ஸ் கருவிகளுக்குள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களும் பொருத்தப்பட்டு விட்டதை நாம் அறிய முடிகிறது.

இருந்தாலும், இந்தக் கட்டுரையில் நாம் அனைவரும் பயன்படுத்தக்கூடிய, எலக்ட்ரிக்கல் அடிப்படையிலான அயர்ன் பாக்ஸ் கருவி குறித்து தான் பார்க்கவிருக்கிறோம்.

அயர்ன் பாக்ஸ் கருவியானது, மிக மிக எளிமையானது. இதற்குள், மொத்தமே மூன்று பொருட்கள்தான் முதன்மையாக இருக்கின்றன.

முதலாவது மற்றும் முக்கியமான பொருள், மின்சாரத்தை பெற்று சூடாகும் கம்பிதான்(heating element). இந்த சூடாகும் கம்பியானது பெரும்பாலும் நிக்ரூன் கம்பியால் தயார் செய்யப்படுகிறது.

நிக்கல் மற்றும் குரோமியம் ஆகியவை கலந்த உலோக கலவையாக, அறியப்படும் இந்த நிக்ரோம் கம்பிகள்(nichrome wire )அதிகப்படியான மின்தடை மதிப்பைக் கொண்டிருக்கின்றன.

நாம் முன்பே அறிந்தது போல, மின்தடை அதிகமானால் ஒரு கடத்தியின் முனைகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாடும்(resistence is directly proportional the voltage diffrence) அதிகமாகும்.

இதன் காரணமாக, அந்தக் கடத்தி சூடாகும். இந்த வெப்பநிலையினால் தான், நம்மால் எளிமையாக துணிகளை சூடேற்ற முடிகிறது.

அதற்காக, நேரடியாக இந்த நிக்ரோம் கம்பிகளை துணிகளின் மீது வைத்து விட முடியாது.அதற்கு கீழே உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு தகடு(base plate )பொருத்தப்பட்டு இருக்கும். அந்தத் தகடு தான், நாம் அயர்ன் பாக்ஸ்! ஆடி கார் போல இயக்குவதற்கு உதவியாக இருக்கும் முக்கோண வடிவிலான அடிப்பகுதி.

மின்தடை மதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதற்காக, நேரடியாக மின்சாரத்தை இவற்றிற்கு வழங்கி விடக்கூடாது. நம் வீடுகளில் பெரும்பாலும் 220 வோல்ட் மின்னழுத்தத்திலான மின்சாரமே வருகிறது.

இந்த மின்சாரத்தால் உண்டாகும் வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கு, தெர்மோஸ்டாட்(thermostat) எனும் அமைப்பு பயன்படுத்தப்படுகிறது. தெர்மோஸ்டாட், என்றால் வெப்ப நிலை கட்டுப்படுத்தும் அமைப்பு(temperature controller )எனப் பொருள்படும்.

நீங்கள் பள்ளிகளிலேயே படித்திருப்பீர்கள்! உலோகங்கள் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை கடக்கும்போது விரிவடைய தொடங்கும். இயல்பாகவே, தாமிரம் அதிகமாக விரிவடையும், அதே நேரம் இரும்பு அதைவிட குறைவாக விரிவடையும். இவை இரண்டையும் இணைத்தார் போல, ஒரு தகடை உருவாக்கினான் அந்த தகடானது வளையத் தொடங்கும்.

இந்த தகடு தான் அயர்ன் பாக்ஸ்களில் பயன்படுத்தப்படுகிறது. நாம் அயர்ன் பாக்ஸ்களில் காணக்கூடிய, வெப்பநிலையை கட்டுப்படுத்தும் ரெகுலேட்டர் அமைப்பில் இவைதான் பயன்படுத்தப்படுகின்றன. ரெகுலேட்டரில் நாம் குறிப்பிட்ட துணி வகையில் வைக்கும் போது, டக் என சத்தம் கேட்பதை கவனித்திருப்போம்.

அடிப்படையில், அந்த ரெகுலேட்டர் அமைப்பானது, அங்கு வைக்கப்பட்டிருக்கும் இரும்பு மற்றும் தாமிர கலவையிலான தகட்டின் மீது ஒரு அழுத்தத்தை செலுத்துகிறது.

இந்த ரெகுலேட்டர் அமைப்பின் மேல் புறத்திற்கு, மின்சாரத்தின் கட்டமுனை(phase terminal) வழங்கப்படுகிறது. கீழ்புறத்தில் இருந்து கட்ட முனையானது சூடாக்கும் அமைப்போடு இணைக்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்த உடன் ரெகுலேட்டரில் பொருத்தப்பட்டு இருக்கும் உலோக தகடானது விரிவடைந்து, அதனுடனான தொடர்பு துண்டிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான், ஆட்டோமேட்டிக் வகையிலான அயர்ன் கருவிகளில் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்தவுடன் “டக்” என சத்தம் கேட்டு மின்சாரம் தடைபடுகிறது.

அப்படியே இந்த அமைப்பு செயல்படாது போனாலும், ரெகுலேட்டருக்கும் சூடாக்கும் அமைப்பிற்கும் இடையே ஒரு காப்பு பொருளும்(fuse like setup) பயன்படுத்தப்படும்.

சூடாக்கும் அமைப்பின் இரண்டு முனைகளுக்கும் இடையே, ஒரு மின் விளக்கும்(neon lamp)பொருத்தப்பட்டிருக்கும்.

ரெகுலேட்டர் அமைப்பில், நாம் துணி வகைகளை மாற்றும்போது உலோக தகடின் மீதான அழுத்தமும் மாறுபடும்! இதன் மூலமாகத்தான் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை அடைந்தவுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டு அதே வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது(spring like mechanism).

தற்காலத்தில், எலக்ட்ரானிக் அடிப்படையில் வெப்பநிலையை கட்டுப்படுத்தி இயங்கக்கூடிய அயர்ன் பாக்ஸ் கருவிகள் வரத் தொடங்கிவிட்டன.  தெர்மோஸ்டாட் ரெகுலேட்டர் அமைப்பிற்கு பதிலாக, ஒரு எலக்ட்ரானிக் சுற்று அமைக்கப்பட்டு அதன் மூலம் வெப்பநிலையை கட்டுப்படுத்தப்படும்.

ஆனால், இன்றளவும் விலை மலிவாக கிடைக்கக்கூடிய, அனைவரும் பயன்படுத்தக்கூடிய வகையில் இருக்கக்கூடிய, அயர்ன் கருவியாக இந்த தெர்மோஸ்டாட் அடிப்படையிலான அயர்ன் கருவிகள் இருக்கின்றன.

எளிமையான அயன் கருவிகள் இயங்குவதற்கு பின்னால் ஓம் விதி தான் இருக்கிறது என்பதையும்! நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

எந்த அளவுக்கு ஒரு பொருள் சிறந்த மின்தடை வழங்குகிறதோ! அந்த அளவிற்கு அந்த பொருள் அதிகமாக வெப்பமடையும்.

அதேநேரம், அந்த பொருள் அதிகப்படியான உருகு நிலையினையும் கொண்டு(high melting point) இருக்க வேண்டும்.

தற்காலத்தில், அதற்கு சிறந்த தேர்வாக நிக்ரோம் கம்பிகள் திகழ்கின்றன.

அதேபோல, சிறந்த மின்கடத்திகளும், சிறந்த வெப்பக் கடத்திகள் ஆகவும் இருக்கும்(wietman franz law).அதற்காகத்தான், கரி மூலம் இயங்கக் கூடிய, அயர்ன் பெட்டிகள் பித்தளையினால் செய்யப்பட்டன.

கிட்டதட்ட, இந்த அடிப்படையிலேயே தண்ணீர் சூடேற்றிகளும்(water heaters) செயல்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மீண்டும், ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.

நான் வழங்கி இருக்கக்கூடிய தொழில்நுட்ப தகவல்களில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் என்னுடைய இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள்.

உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

https://kaniyam.com/how-does-iron-box-works-in-tamil/

#basicElectronics #dailyElectronics #electronics #ironBox

2024-11-18

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல கட்டுரைகள் குறித்து நாம் விவாதித்திருக்கிறோம். ஆனால், இன்றைக்கு நாம் விவாதிக்க இருக்கக்கூடிய கட்டுரை நம்மில் பலருக்கும் பழைய நினைவுகளை கொண்டு வரும் என நம்புகிறேன்.

சரி! அதற்கெல்லாம் முன்பாக வழக்கம் போல என்னுடைய இன்னபிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை, நீங்கள் படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

kaniyam.com/category/basic-electronics/

1990களில் தான், தனியார் தொலைக்காட்சிகளின் ஆதிக்கம் இந்தியாவில் தொடங்கியது. அதற்கு முன்பெல்லாம், பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியை கண்டு ரசித்த நெஞ்சங்கள் பலரும், இந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இந்தக் கட்டுரை எலக்ட்ரானிக்ஸ் என்கிற துறையினையும் கடந்து, உங்கள் அனைவர் மத்தியில் இருக்கக்கூடிய நினைவுகளை சற்று சீர்தூக்கிப் பார்க்க செய்யும்.

அப்பொழுதெல்லாம் வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்ததில்லை! கண்ணைக் கவரும் எல்இடி விளக்குகள் இருந்ததில்லை! குண்டு பல்பு என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் டெக்ஸ்டைன் விளக்குகளும், கருப்பு வெள்ளை திரையிலான தொலைக்காட்சி பெட்டிகளுமே இருந்தன.

பெரும்பாலும் ஜப்பானிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட நிறுவனங்களின், தொலைக்காட்சி பெட்டிகளே இந்திய வீடுகளை அலங்கரித்து வந்தன.

தற்போது உள்ளது போல், ott தளங்களோ இணைய வசதியோ இல்லை. வீட்டின் கூரைமேல் இருக்கும் ஆண்டெனாவை கொண்டு, எவ்வித கட்டணமும் இன்றி தூர்தர்ஷன் தொலைக்காட்சியை இலவசமாக பார்க்கலாம்.

இவ்வளவு தூரம் நம் நினைவுகளோடு ஒன்றிப்போன சி ஆர் டி தொலைக்காட்சிகள் எவ்வாறு வேலை செய்கின்றன? என்பதை எளிமையாக தற்போது காணலாம்.

பார்ப்பதற்கு கோள வடிவில் கண்ணாடி குடுவையைப் போல் இருக்கும் அப்போதையே சி ஆர் டி டிவிகள். ஒவ்வொரு டிவியும் சுமார் 10 கிலோவுக்கு அதிகமாக எடை இருக்கும்.

முன்பக்கம் படம் தெரியக்கூடிய பகுதியை பிக்சர் டியூப்(picture tube)என அப்பொழுது அழைப்பார்கள். அடிப்படையில், இந்த பிக்சர் டியூபுக்குள் தான் நாம் பார்த்து ரசித்த பல பிச்சர்களும் அடங்கியிருக்கிறது.

இன்றைக்கு நாம் எல்இடி விளக்குகள் பயன்படுத்தும் அதே தொழில்நுட்பம் தான், உண்மையில் சிஆர்டி தொலைக்காட்சிகளிலும் பயன்படுத்தப்பட்டது. சி ஆர் டி என்பதன் முழு விரிவாக்கமானது காத்தோடு கதிர் குழாய்(cathode ray oscilloscope)என பொருள்படும்.

எலக்ட்ரான்களை மோதச் செய்து, அவற்றை ஒரு மையப் புள்ளியில் குவிப்பதன் மூலம் ஒளியானது வெளிப்படுகிறது. இதை, நாம் எல் இ டி விளக்குகள் தொடர்பான கட்டுரையிலேயே விவாதித்திருப்போம்.

உண்மையில், சி ஆர் டி தொலைக்காட்சிகளுக்கு உள்ளும் எலக்ட்ரான்களை சுடக்கூடிய ஒரு துப்பாக்கி தான்(electron gun)இருக்கும்.

திரைப்படங்களில் வரும் துப்பாக்கிச் சண்டை காட்சிகளை உங்கள் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது, இந்த எலக்ட்ரான் துப்பாக்கி தான். இந்த எலக்ட்ரான் துப்பாக்கியில் இருந்து அதி வேகத்தில் எலக்ட்ரான்கள் சுடப்படும்.

அவற்றை சுற்றி காந்தப்புலத்தை ஏற்படுத்துவதற்கான, கம்பிச்சுருள்கள் அமைக்கப்பட்டு இருக்கும். இந்த கம்பிச்சுருள்கள் எலக்ட்ரானிக் துப்பாக்கியில் இருந்து வெளியாகும் காத்தோடு கதிர்களை குறிப்பிட்ட பகுதிகளில் குவியச் செய்யும்.

நாம் பார்க்கக்கூடிய கருப்பு திரையில், இந்த கதிர்களை உருவாக்கிக் கொள்வதற்கான அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கும்.

கருப்பு வெள்ளை தொலைக்காட்சிகளில், ஒரே நிறத்தில் எலக்ட்ரான்களை வெளியிடக்கூடிய துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

ஆனால், அதற்குப் பின்பு வந்த கலர் தொலைக்காட்சிகளில் ஒன்றல்ல! இரண்டல்ல! மூன்று துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன. சிவப்பு,பச்சை மற்றும் நீல நிறங்களில் எலக்ட்ரான்களை வெளியிடக்கூடிய வகையில் அவை வடிவம் வைக்கப்பட்டிருந்தன.

இவை அனைத்தும் காற்று புகாத குழாய் போன்ற அமைப்பிற்குள் அடைபட்டு இருக்கும். அப்பொழுதுதான், வளிமண்டலத்தில் இருக்கக்கூடிய வாயுத்துகளோடு நம் விழித்திரையை நோக்கி வரும் எலக்ட்ரான் கணைகள் உறவாடாமல் இருக்கும்.

இதனால் கண்ணாடி குழாய்க்குள் அதிகப்படியான அழுத்தம் நிலவும்.

அதனால்தான், சில நேரம் பழைய தொலைக்காட்சி பெட்டிகள் தீப்பிடிக்கும் போது பலத்த சத்தத்தோடு வெடித்து சிதறுவதை பார்த்து இருப்போம்.

எந்த அளவிற்கு அதிகப்படியான ஆற்றலை எலக்ட்ரான் துப்பாக்கிக்கு வழங்குகிறோமோ! அந்த அளவிற்கு சிறந்த தரத்திலான படத்தை திரையில் காண முடியும்.

பெரும்பாலும் குழாயினுள் 40% வரை ஈயம் ஆக்ஸைடு வாயு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், பேரியம் ஆக்சைடு போன்ற இன்ன பிற வாயுக்களும் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த சிஆர்டி திரைகள், தற்கால எல்இடி திரைகளைப் போல நூறு ஆயிரம் அங்குலம் என்றெல்லாம் கிடைத்ததில்லை. பொதுவாகவே, 20 அங்குல தொலைக்காட்சி பெட்டி மற்றும் 14 அங்குல தொலைக்காட்சி பெட்டி ஆகியவைதான் விற்பனையில் முன்னணியில் இருந்து வந்தன.

தற்பொழுது மிகப்பெரிய திரைகளை பார்த்து திருப்தி அடையாத நமது மனம் தான்,  எலக்ட்ரான் துப்பாக்கியில் இருந்து வெளிவந்த குறைந்த தெளிவு கொண்ட காட்சிகளைக் கண்டு பரவசமடைந்தது.

மேலும், பின்னாட்களில் வந்த சிஆர்டி தொலைக்காட்சிகளில் சில உள்ளார்ந்த மின் சுற்றுகளும், உள்ளார்ந்த சிப்புகளும் பயன்படுத்தப்பட்டன.

மேலும், ஒரு இடத்திற்கு தாமதமாக செல்வது நமக்கு மட்டுமல்ல! எலக்ட்ரான் துப்பாக்கிக்கும் பொருந்தும். ஒரு குறிப்பிட்ட அளவு வெப்பநிலையை அடைந்த பிறகு எலக்ட்ரான் துப்பாக்கியில் இருந்து, எலக்ட்ரான் கதிர்கள் வெளிவரத் தொடங்கும். இவை, நீங்கள் தொலைக்காட்சியை ஆன் செய்யும்போது முதலில் சப்தம் தான் கேட்கும், அதைத்தொடர்ந்து தான் திரையில் படங்கள் தோன்றும்.

பொதுவாகவே, இந்த எலக்ட்ரான் துப்பாக்கி மற்றும் காந்தப்புல சுருள்கள் போன்றவற்றில் தான் பிரச்சனைகள் ஏற்படும் அல்லது மின்சுற்றில் பிரச்சனைகள் ஏற்படும். இதனால், பழுதடைந்த சாலையைப் போல் படங்கள் தெரியும்.

ஆனாலும், நீடித்து உழைக்கக்கூடிய தன்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சிஆர்டி தொலைக்காட்சிகள் விளங்கின. இன்றும் கூட, நண்பர் ஒருவரது வீட்டில் 33 ஆண்டுகளாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய சி ஆர் டி டிவி தொடர்பாக அறிந்து கொண்டேன்.

உண்மையில், இந்த கட்டுரையில் அடிப்படையான தகவல்களை மட்டுமே வழங்கியிருக்கிறேன். சி ஆர் டி தொழில்நுட்பம் தொடர்பாக விரிவான ஒரு கட்டுரையை விரைவில் வெளியிடுகிறேன்.

நான் இந்த கட்டுரையில் குறிப்பிட்டேன் என்பதற்காக, ஆக்கர் கடையில் உறங்கிக் கொண்டிருக்கும் பழைய தொலைக்காட்சி பெட்டியை திறந்து பார்த்து விடாதீர்கள். அதிக அழுத்தத்துடன் இருக்கக்கூடிய, சிஆர்டி திரைகள் திடீரென வெடித்து விடக்கூடும்.மேலும், அதன் உள்ளே நிரப்பப்பட்டு இருக்கும் வாயுக்கள் நச்சுத்தன்மை மிக்கவை.

எல்இடி டிவிகளை காட்டிலும், சி ஆர் டி டிவிகளோடு சற்று கவனமாக இருக்க வேண்டும்.

நான் வழங்கி இருக்கக்கூடிய தொழில்நுட்ப தகவல்களில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் என்னுடைய இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள்.

உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

https://kaniyam.com/how-does-crt-screen-tv-works/

#basicElectronics #dailyElectronics #electronics

2024-11-04

நேற்றுதான் ஒரு எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையை எழுதியிருந்தேன். தொடர்ந்து, இன்றும் அடுத்த கட்டுரையை எழுதுகிறேன்.

இந்த கட்டுரையை எழுதுவதற்கு மிக முக்கியமான காரணம், என்னுடைய வீட்டில் வாங்கி ஐந்து நாட்களிலேயே பழுதாகிபோன கால்குலேட்டர் ஒன்று பல ஆண்டுகளாக ஏதோ ஒரு இடத்தில் இருந்து வந்தது.

தீபாவளியோடு எதர்ச்சியாக இதை காண நேர்ந்தது. இன்றைக்கு அதை ஆர்வத்தோடு பிரித்துப் பார்த்தேன். ஏற்கனவே, கணிப்பான்கள் எவ்வாறு வேலை செய்கிறது? என்பது குறித்து எனக்கு ஒரு அடிப்படை அறிவு இருந்தது.

இருந்த போதிலும், அந்த கணிப்பாணை  பிரித்து பார்த்தபோது, அதில் இருந்த எலக்ட்ரானிக் கருவிகள் ஆர்வத்தை தூண்டின.

அப்படி இந்த கால்குலேட்டர்குள் எந்தெந்த எலக்ட்ரானிக் கருவிகள் இருக்கின்றன ? என்பதை பார்ப்பதற்கு முன்பாக, என்னுடைய இன்ன பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை படிக்க விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இனிப்பை பயன்படுத்தவும்.

kaniyam.com/category/basic-electronics/

முதலில் அதற்கு பின்னால் இருக்கக்கூடிய, நான்கு screw களையும் கலக்கி விடலாம்.

நீங்கள் மேலே பார்ப்பது போன்ற மின்சுற்றுதான், இந்த கால்குலேட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நடுவில் கரும்புள்ளியாக இருக்கும் அதற்குள் தான், உள்ளார்ந்த மின் சுற்று(IC ) அமைந்திருக்கிறது.

உண்மையில், அந்த கருப்பு புள்ளியை போல மிகவும் பெரியதாக எல்லாம் இருக்காது. அதனுடைய, எடுத்துக்காட்டு புகைப்படம் ஒன்றை நான் கீழே வழங்கி இருக்கிறேன்.

உங்கள் விரலின் நகத்தளவிற்கு இருக்கக்கூடிய, இந்த சிறிய பொருள்தான் அனைத்து கணக்கீடுகளையும் செய்வதில் முதன்மை கருவியாக அமைகிறது.

அடுத்து இந்த மின்சுற்றில் நீங்கள் ஆரஞ்சு நிறத்தில் நான்கு கெப்பாசிட்டர்களை பார்க்க முடியும்.

இந்த நான்கு கெபாசிட்டர்களும் உள்ளீட்டு தரவுகளை சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

நான் முன்பே கூறியிருந்தேன், தரவுகள் பூஜ்ஜியம் மற்றும் ஒன்று எனும் அளவிலேயே சேமித்து வைக்கப்படுகின்றன.அதற்காக, இவை பயன்படுத்தப்படுகின்றன.

புகைப்படத்தின் வலது புறம் மேற்புறமாக ஒரு பேட்டரி பொருத்தப்பட்டு இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.அதற்கு அருகிலேயே ஒரு கருப்பு நிற 25 மைக்ரோ பாராட் கெபாசிட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனக்குத் தெரிந்தவரை இந்த கெபாசிட்டர் பேட்டரியில் இருந்து வரக்கூடிய மின் ஆற்றலை சரிவர வழங்குவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

மேலும், இத்தகைய கால்குலேட்டர்களில் சோலார் பேனல்கள் இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும்.

நாம் முதலிலேயே ஒளிமின் டையோடுகள் கட்டுரையில் பார்த்தது போல, ஒளி ஆற்றலானது நேரடியாக மின் ஆற்றல் ஆக மாற்றப்படுகிறது.

ஆனால், அதில் நிறைய பேர் நினைப்பது என்னவென்றால்!  நாம் இந்த கால்குலேட்டர்கலே வெயிலில் வைக்கும் போது இதனுடைய பேட்டரிக்கு சார்ஜ் செய்யப்படும் என்று நினைத்துக் கொள்கிறோம்.

அந்த வகையில் இயங்கக்கூடிய கால்குலேட்டர்களும் சந்தையில் இருந்தாலும், பெரும்பான்மையாக மலிவு விலையில் கிடைக்கக்கூடிய கால்குலேட்டர்களில் நீங்கள் வெயிலில் காண்பிக்கும் போது சோலார் பேனல் வேலை செய்யும்.

ஆனால், அதன் மூலமாக பேட்டரிக்கு சார்ஜ் செய்வது வாய்ப்பில்லாத விஷயம்தான்.

இத்தகைய மின் சுற்றுக்கு மறுபுறம் சிறிய சிறிய தாமரம் பூசப்பட்ட புள்ளிகள் இருக்கும். இதன் மீது சிலிக்கானால் செய்யப்பட்ட நாம் பார்க்கக்கூடிய பட்டன்கள் இருக்கும்.

இதில் ஒரு பட்டனை நாம் அமிழ்த்தும்போது, அதற்கான சங்கேத குறியீடு(binary code) (like 0001) உள்ளார்ந்த மின்சுற்று அனுப்பப்படுகிறது.

அந்த மதிப்பானது எட்டு தசம எல்சிடி(8 segment) திரையில் தெரிகிறது.

மேலும் கூட்டல்,கழித்தல்,பெருக்கல், வகுத்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை நாம் செய்ய! அதற்குரிய பொத்தானை அமுக்கும்போது, அதற்குரிய சபிக்கையானது உள்ளார்ந்த மின்சுற்று அனுப்பப்பட்டு, அங்கே வழங்கப்பட்டுள்ள கெபாசிட்டர்களின் வழியாக மின்சாரம் சேமிக்கப்பட்டு கணக்கீடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

இது சற்றே குழப்பக்கூடிய தலைப்பு, உங்களுக்கு அது குறித்த கட்டுரை தேவைப்பட்டால் விரிவாக நான் ஆராய்வு செய்துவிட்டு எழுதுகிறேன்.

பொதுவாக, கால்குலேட்டர்களில் பயன்படுத்தக்கூடிய பரிச்சயமான சிப்(IC ) எதுவென்று நான் இணையத்தில் தேடும்போது, இன்டெல் நிறுவனத்தின் உடைய 4004(intel core 4004)சிப் வகை ஆரம்பகால கால்க்குலெட்டர்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

இதில் 320 பிட் அளவிலான ராம் வசதியும், 2048 பிட் அளவிலான சேமிப்பக வசதியும்( 320bit ram and 2048bit storage)கொடுக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நாம் எந்த அளவிற்கு எலக்ட்ரானிக் துறையில் முன்னேறி இருக்கிறோம்! என்று.

இதுவே, காசியோ(casio) போன்ற நிறுவனங்களில் விற்கப்படும் அறிவியல் கால்குலேட்டர்களில்(scientific calculators)இதைவிட அதிகப்படியான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் இருக்கும்.

தொழில்நுட்பக் கட்டுரைகளை எழுதுவதோடு, இதுபோல அன்றாட கருவிகளில் இருக்கக்கூடிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை குறித்தும் கட்டுரைகள் எழுதலாமென முடிவு செய்திருக்கிறேன்.

அதற்காக பழுதான, பழைய எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சேகரித்து வருகிறேன். உங்களுக்கும் இதுகுறித்து தெரிந்தால் என்னுடைய மின் மடல் முகவரிக்கு மடல் இயற்றுங்கள்.

கருத்துக்கள் இருப்பினும் தெரிவியுங்கள்.

மீண்டும் ஒரு சுவாரசியமான எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையில் சந்திப்போம்.

கட்டுரையாளர்:-
ஸ்ரீ காளீஸ்வரர் செ,
இளங்கலை இயற்பியல் மாணவர்,
(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)
இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,
கணியம் அறக்கட்டளை.
மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com
இணையம் : ssktamil.wordpress.com

https://kaniyam.com/what-is-inside-the-calculators/

#basicElectronics #calculator #chip #dailyElectronics #electronics #ic #integratingCircuits

2024-10-13

நாம் தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளாக இருந்ததுதான் மெமரி அட்டைகள்(Memory cards).

ஆம்! தற்காலத்தில் மெமரி அட்டைகளை பயன்படுத்துவோர் மிகவும் குறைந்து விட்டனர். இருந்தபோதிலும், கேமராக்கள் போன்றவற்றில் இன்னும் மெமரி அட்டைகளை பார்க்க முடிகிறது.

நான் சிறுவனாக இருந்த போது யோசித்ததுண்டு!

எப்படி இவ்வளவு சிறிய ஒரு பிளாஸ்டிக் துண்டிற்குள், இத்தனை புகைப்படங்களை சேகரித்து வைக்க முடியும்?

இத்தனை பாடல்களை சேகரித்து வைக்க முடியும்? என்றெல்லாம் யோசித்து இருக்கிறேன்.

அப்பொழுது, இரண்டு ஜிபி மெமரி கார்டை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

அப்பொழுது மொபைல் போன்களில் சில எம்பிகளுக்குள்ளாகவே மெமரி வசதி(inbuilt memory)இருக்கும்.

நம்மில் பலரும் இதை கடந்து வந்திருப்போம்.

ஆனால், மெமரி அட்டைகளுக்கு பின்னால் இருக்கக்கூடிய அறிவியல் மிக மிக எளிமையானது.

அதற்கு முன்பாக, என்னுடைய பிற எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை நீங்கள் பார்வையிட விரும்பினால் கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

kaniyam.com/category/basic-electronics/

அடிப்படையில் தரவுகள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன? கொஞ்சம் வினோதமான கேள்விதான்.

அடிப்படையில் தரவுகள் சேமிக்கப்படுவதற்கு இரண்டே வாய்ப்புகள் தான் இருக்கின்றன. ஒன்று பூஜ்ஜியம் மற்றொன்று ஒன்று ( 0 1)

நாம் பள்ளிகளில் லாஜிக் முறையில் படித்திருப்போம். பூஜ்ஜியம் என்றால் ஆப்(off ) என்று அர்த்தம் ஒன்று என்றால் ஆன்(ON) என்று அர்த்தம்.

அடிப்படையில், இந்த முறையில் தான் தரவுகள் சேமிக்கப்படுகின்றன. குறிப்பிட்ட முறையில் ஆன்-ஆப் செய்யும் போது ஒரு தரவை உங்களால் சேமிக்க முடியும்.

அடிப்படையில், உங்களிடம் எட்டு ஸ்விட்ச்(bit) இருந்தால், உங்களால் ஒரு பைட்(byte) அளவிலான தரவை சேமிக்க முடியும்.

நீங்கள் கணினி அறிவியல் படித்திருந்தால் bit, byte தகவல்கள் குறித்து அறிந்திருப்பீர்கள்.

8bit என்றால் ஒரு பைட்(byte) என்று அர்த்தம்.

இப்பொழுது, உதாரணத்திற்கு வருவோம். உங்களுடைய மொபைல் போனில் இருக்கக்கூடிய புகைப்படங்கள் குறைந்தபட்சம் எத்தனை எம்பிகளுக்கு உள்ளாக இருக்கும்?

எப்படியும் ஐந்து எம்பிக்கு குறைந்து இப்பொழுது இருக்கக்கூடிய மொபைல் கேமராக்களில் புகைப்படம் எடுக்க முடியாது.

நீங்கள் கூகுளில் இருந்து ஒரு புகைப்படத்தை பதிவிறக்கம் செய்தால், குறைந்தபட்சம் 10 கேபி(kb)க்குள் ஒரு புகைப்படத்தை உங்களால் பெற முடியும்.

பத்து கேபி என்றால் பத்தாயிரம் பைட்கள்(10000 bytes) என்று அர்த்தம்.

அந்த பத்தாயிரம் பைட்டுகளையும் சேகரிக்க, உங்களுக்கு 80 ஆயிரம் ஸ்விட்ச்கள்(80,000 switches or bits) தேவைப்படும்.

இந்த ஸ்விட்ச் கள் என்னும் வார்த்தையை நான் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதற்கு காரணம் ட்ரான்சிஸ்டர்கள் கட்டுரையில் நீங்கள் படித்திருப்பீர்கள். டிரான்சிஸ்டர்கள் ஸ்விட்ச் போல வேலை செய்யும் என்று!

ஆம்! நீங்கள் கணித்தது சரிதான்

உங்களுடைய மிகச் சிறிய மெமரி அட்டைகளுக்குள் இருப்பது ட்ரான்சிஸ்டர்களும், கெப்பாசிட்டர்களும் அடங்கிய ஒரு ஆகச் சிறந்த உள்ளார்ந்த மின் சுற்றுதான்(best integrated circuit).

உதாரணத்திற்கு, நான் இணையத்தில் இருந்து திரட்டிய தகவலின் படி இன்டெல் நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை இரண்டு ஜிபி ப்ராசஸரில்(intel third gen processor) இருக்கக்கூடிய, ட்ரான்சிஸ்டர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று உங்களுக்கு ஏதேனும் கணிப்பு இருக்கிறதா?

நூரெல்லாம் கிடையாது ,ஆயிரமும் அல்ல, லட்சமும் அல்ல.

சுமார் 148 கோடி ட்ரான்சிஸ்டர்கள் intel மூன்றாம் தலைமுறை சிப்பில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

கேட்கும்போதே தலை சுற்றுகிறது அல்லவா?

நீங்கள் வைத்திருக்கக் கூடிய மெமரி அட்டைகளில் இது போல கோடிக்கணக்கான ட்ரான்சிஸ்டர்கள், கோடிக்கணக்கான கெபாசிட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வெளியில் படிக்கும் போது ஒரு ட்ரான்சிஸ்டர் என்று படிப்போம். ஆனால், எவ்வளவு பெரிய எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் அதன்  உள் புதைந்து இருக்கிறது என்று பார்க்கிறீர்கள் அல்லவா?

எலக்ட்ரானிக் உலகம் விந்தை நிறைந்தது, என்று சொல்வதற்கு பின்னால் இதுதான் முக்கியமான காரணம்.

அந்த கெபாசிட்டர்கள் மற்றும் ட்ரான்சிஸ்டர்களை ஆன் மற்றும் ஆப் செய்வதன் மூலமாக உங்களால் தரவுகளை சேமிக்க முடியும்.

ஆனால், ஒரு மெமரி அட்டையை இயக்குவதற்கு அதிகப்படியான மற்றும் குறிப்பிட்ட(particular environment) வெப்பநிலை மற்றும் மின்னழுத்தம் தேவைப்படும்.

அதை வழங்குவதற்கு ஏற்றார் போல, உங்களுடைய கருவிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஒருவேளை அத்தகு விதிமுறைகளை செய்யாமல் போயிருந்தால், நீங்கள் வெளியில் வைத்திருக்கும் போது கூட உங்கள் மெமரி அட்டையில் தரவுகள் சேமிக்கப்பட்டு விடும்.

இதன் காரணமாகத்தான் மெமரி அட்டைகளை பொதுவாக வெயிலில் வைக்க கூடாது! என வெளிஅட்டைகளில் போடப்பட்டிருக்கும்.

மேலும், சில நேரம் அதிகமாக சூடாகும்போது உங்களுடைய தரவுகள் தானாக அழிந்து போய் விடுவதும் நடக்கும்.

ஆனால், இந்த காலத்தில் தொழில்நுட்பம் நீங்கள் கற்பனை செய்து பார்ப்பதை விடவும் மிக வேகமாக வளர்ந்துவிட்டது.

இன்றைக்கு கடலுக்குள் கிளவுட் ஸ்டோரேஜ் நிலையங்களை(under sea cloud stronge chambers)அமைக்கின்ற அளவுக்கு எலக்ட்ரானிக் துறையின் வளர்ச்சி மலைக்க வைக்கிறது.

ஆனால், இந்த எலக்ட்ரானிக் உலகின் அடிப்படையே, நாம் முதல் பத்து கட்டுரைகளில் கடந்து வந்த கெபாசிட்டர்கள்,டிரான்சிஸ்டர்கள், டையோடுகள் உள்ளிட்ட சிறு சிறு சாதனங்கள் தான்.

ஏன்!  இரண்டு லட்சம் டான்சிஸ்டர்களில் ஒரு பாதியை ஆன் மற்றும் ஒரு பாதியை ஆப் செய்து, ஒரு குறிப்பிட்ட முறையில் ஒருங்கிணைக்கும் போது உங்களால் உங்களுக்கு பிடித்த சினிமா பாட்டின் சில வரிகளை கூட உருவாக்க முடியும்.

இந்த எலக்ட்ரானிக் உலகில் இரண்டே வார்த்தைகள் தான் ஒன்று ஆன் மற்றொன்று ஆப்.

இந்த இரண்டை மட்டும் வைத்துக் கொண்டுதான் எலக்ட்ரானிக் உலகமும், கணினி உலகமும் நாம் வாழும் புவியை ஆட்டி படைக்கின்றன.

சரி இந்த கட்டுரையின் மூலமாக புதுவிதமான தகவலை அறிந்து கொண்டிருப்பீர்கள்! என்று நம்புகிறேன்.

மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையோடு உங்களை வந்து சந்திக்கிறேன்.

மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருந்தால், தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் ஏற்றவும்.

உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com

இணையம் : ssktamil.wordpress.com

https://kaniyam.com/how-the-memory-cards-work/

#basicElectronics #dailyElectronics #electronics #memoryCards

2024-10-06

எளிய எலக்ட்ரானிக்ஸ் பகுதியில், பல தானியங்கி கருவிகள் குறித்தும், சென்சார்கள் குறித்தும், டையோடுகள் குறித்தும், இன்ன பிற எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்தும் கடந்த 15 கட்டுரைகளில் விவாதித்து இருக்கிறோம்.

இன்றைக்கு நான் உங்கள் மத்தியில் குறிப்பிட இருப்பது எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து அல்ல! மாறாக, எலக்ட்ரானிக்ஸ் துறையின் அபரிவிதமான வளர்ச்சியால் இன்றைக்கு இணையத்தின் மூலம் இயங்கும் கருவிகள்(IOT), தானியங்கி வீட்டு வசதி சாதனங்கள்(Home automation devices)ஆகியவை எளிய வகையில் கிடைக்கின்றன.

கூகுள் நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனத்தின் அலெக்சா(alexa ) போன்ற சேவைகள் உலகளாவிய அளவில் தானியங்கி வீட்டு வசதி துறையில் பிரபலமாக இருக்கின்றன.

இத்தகைய பெரு நிறுவனங்களைக் கடந்து, சில சிறு,சிறு நிறுவனங்களும் தானியங்கி சேவைகளை வழங்குகின்றன.

ஆனால், இவற்றில் எதுவும் திறந்த நிலை பயன்பாடுகளாக இருப்பதில்லை.

அதற்குரிய மாதாந்திர தொகை(subscription cost),கருவியை வாங்குவதற்கான தொகை(buying cost) மேலும், இன்ன பிற செலவுகளையும்(value added cost) கவனிக்க வேண்டிய உள்ளது.

சிலர் குறைந்த தரத்திலான மூன்றாம் தர நிறுவன பொருட்களை(mostly replica) பயன்படுத்துவார்கள். ஆனால், அவ்வாறு பயன்படுத்தும் போது உங்களை பிறர் எளிமையாக உளவு(spying) பார்க்க முடியும்.

இத்தகைய பிரச்சினைகளை நாம் கடந்து, அனைவருக்கும் ஆன ஒரு கட்டற்ற( opensource)தானியங்கி வீட்டு வசதி சாதனம் இருக்கிறதா? என்று கேட்டால், அதற்கான தீர்வாக உங்கள் மத்தியில் வந்திருப்பது தான் homeassistant.io .

போதாக்குறைக்கு பெருநிறுவனங்களே உங்களுடைய தரவுகளை சேகரிக்க(data collecting )தவறுவதில்லை.

இந்த ஹோம் அசிஸ்டன்ட் முழுக்க, முழுக்க ஒரு திறந்த நிலை திட்டமாகும்.

இதன் மூலம்z உங்களுடைய தரவுகள் 100 சதவிகிதம் பாதுகாக்கப்படுகிறது.

இதை நிர்வகிக்க, மாதாந்திர தொகை எதையும் செலுத்த வேண்டியது தேவை கிடையாது.

இவர்கள் வழங்கக்கூடிய கருவியை வாங்குவதற்கு மட்டும், 99டாலர்கள்(99$) செலவழிக்க வேண்டும்.

Google மற்றும் அலெக்சாவோடு இணைந்து பணியாற்றக்கூடிய திறனை ஹோம் அசிஸ்டன்ட் பெற்றிருக்கிறது.

இந்த நிறுவனம், பின்னாளில் எந்த பெரு நிறுவனத்தோடும் இணைய போவதில்லையென வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

எனவே உங்களுடைய தரவுகள் நான் மேற்குறிப்பிட்டது போல, பாதுகாப்பாக இருக்கும்.

மேலும் தன்னலம் பாராத பல கட்டற்ற நிரலாக்க  கலைஞர்களின் மூலமாக, தினம்தோறும் மேம்படுத்தப்பட்டு கொண்டு வருகிறது.

உங்களுடைய இல்லத்தை தானியங்கி கூடாரமாக மாற்ற, அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்டு வருகிறது.

Rasberry pie போன்ற இலகு ரகு மென்பொருளில் இயங்கக்கூடிய திறனை பெற்றிருக்கிறது.

உங்கள் வீட்டில் உள்ள அனைத்து ஸ்மார்ட் சாதனங்களையும் கட்டுப்படுத்த முடியும்

அலாவுதீன் மந்திர விளக்கில் வருவது போல, உங்கள் வீட்டில் நீங்கள் மாயாஜாலங்களை செய்ய முடியும்.

நீங்கள் பேசுவதன் மூலமாகவே விளக்குகளை எரிய வைக்க முடியும். மின்விசிறியை இயக்க முடியும், இன்ன பிற வசதிகளையும் பயன்படுத்த முடியும்.

உலகின் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு, இந்தியாவிலிருக்கும் உங்கள் வீட்டின் சமையலறை மின்விசிறியை இயக்க முடியும்.

மேற்கூறிய அனைத்தையும், பிற நிறுவனங்களும் வழங்கும்போதும் ! நான் முன்பே குறிப்பிட்டது போல அவை அனைத்தும், லாப நோக்கத்திற்காக இயங்கும் நிறுவனங்கள்.

லாப நோக்கமின்றி,கட்டற்ற தொழில்நுட்பமாக வடிவெடுத்து இருக்கும் ஹோம் அசிஸ்டன்ட் சாதனத்திற்கு நாம் ஆதரவு வழங்க வேண்டும்.

இதன் மூலமே இதுபோன்ற பல கட்டற்ற கருவிகள் நமக்கும் காணக் கிடைக்கும்.

வருங்காலத்தில் கட்டற்ற ஒரு தொழில்நுட்ப சமுதாயத்தை நம்மால் உருவாக்க முடியும்.

எனவே,  வாய்ப்பு இருக்கும் அனைவரும் இந்த ஹோம் அசிஸ்டன்ட் சாதனத்தை பயன்படுத்தி பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குறைந்தபட்சம் அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தை யாவது பார்வையிடுங்கள்.

மேற்படி, வழங்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஹோம் அசிஸ்டன்ட் கருவியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பெறப்பட்டது.

Official site:www.home-assistant.io/

மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.

உங்களுடைய கருத்துக்கள் எப்போதும் வரவேற்கப்படுகிறது.

மீண்டும் ஒரு கட்டுரையில் உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி,

நாகர்கோவில்-02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின்மடல் முகவரி: srikaleeswarar@myyahoo.com

இணையம் : ssktamil.wordpress.com/

https://kaniyam.com/an-open-source-home-assistant/

#basicElectronics #dailyElectronics #electronics #homeAssistantIo #homeAutomation #iot

2024-09-29

நான் எளிய எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை எழுத தொடங்கி, இரண்டு மாதங்கள் ஆகிறது. அந்த வகையில் இது என்னுடைய 15 வது எலக்ட்ரானிக்ஸ் கட்டுரை.

கடந்த கட்டுரையில் உள்ளார்ந்த மின்சுற்றுகள் குறித்து பார்த்திருந்தோம். அதுபோன்று என்னுடைய பிற எலக்ட்ரானிக்ஸ் கட்டுரைகளை பார்வையிட கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தவும்.

இன்றைக்கு நாம் பார்க்க இருக்கக்கூடிய தலைப்பு சிம் கார்டுகள்.

சிம் கார்டுகளுக்கும் எலக்ட்ரானிக் தொழில்நுட்பத்திற்கும் அப்படி என்ன சம்பந்தம் இருக்கு போகிறது? என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம்.

அடிப்படையில், சிம் அட்டைகள் ஒரு தேர்ந்த உள்ளார்ந்த மின்சுற்றுக்கு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

சிம் அட்டைகளால், தொலைதொடர்பு கருவியோடு இணைக்கப்படும் போது அழைப்புகளை பெறுவதற்கும் மேற்கொள்வதற்கும் மற்றும் குறுஞ்செய்திகள் போன்றவற்றிற்கான அனுமதியை வழங்க முடியும்.

ஆம் நீங்கள் கேட்பது சரிதான் சிம் அட்டைகள் என்பது அனுமதியை வழங்கக்கூடிய ஒரு கடவுச்சீட்டு போல தான்.

சிம் அட்டைகளில் ஒரு மிகச்சிறிய தங்க நிறத்திலான அமைப்பு இருப்பதை பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்தில் நீங்கள் பயன்படுத்தி இருக்கக்கூடிய நோக்கியா போன்களில் பெரிய அளவிலான சிம் அட்டைகளை பார்த்திருப்பீர்கள்.

ஒரு காலத்தில் ஐந்தாறு சிம் போடக்கூடிய மொபைல் ஃபோன்கள் கூட சந்தையில் கிடைத்தன.

சிம் அட்டைகளும் குறை கடத்திகளின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன.

அவற்றின் உள்ளாக ஒரு தேர்ந்த மின்சுற்று வரையப்பட்டுள்ளது.

அந்த உள்ளார்ந்த மின்சுற்றைக் கொண்டு உங்களால் அலைபேசி தொடர்புகளுக்கான அனுமதிகளை பெற முடிகிறது.

வழக்கமாக, சிம் அட்டைகள் இயங்குவதற்கு 5,3,1.8 ஆகிய மூன்று வோல்டேஜ் நிலைகளில் வடிவமைக்கப்படுகின்றன.

நாம் தற்பொழுது பயன்படுத்தக்கூடிய சிமட்டைகள் பெரும்பாலும் 1.80வோல்டேஜ் ன்னழுத்தத்திலேயே இயங்கக் கூடியது.

சிலர் சிம் அட்டைகளில் தங்கம் இருப்பதாக கூறி, புரளி கிளப்பி விடுவதையும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால், உண்மையிலேயே மிக மிகச் சிறிய அளவில் தங்கமானது சிம்ம அட்டைகளில் பயன்படுத்தப்படுகிறது.

உதாரணமாக, ஒரு நாலாயிரம் அட்டைகளுக்கு, ஒரு கிராம் அளவில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது என ஒப்பீட்டு அளவில் கொள்ளலாம்.

அடிப்படையில் தங்கமும் ஒரு குறை கடத்தி என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

சிம் அட்டைகளுக்கு என சிறப்பு குறியீட்டு எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பத் துறையில் சிம் கார்டுகள் ஐ எம் எஸ் ஐ (IMSI) என அறியப்படுகிறது.

அதன் முழு பொருள் ஆனது சர்வதேச மொபைல் சந்தாதாரர் அடையாள அட்டை என பொருள்படும்.

சிம் கார்டுகளில், உங்களால் தரவுகளை சேமித்து வைக்க முடியும். உண்மையில் கேட்பதற்கு வினோதமாக இருக்கலாம். ஆனால், அடிப்படையில் சந்தையில் காணப்படக்கூடிய சிம் கார்டுகளில் 8 கேபி முதல் 256 கேபி வரையிலான தொடர்புகளை சேமித்து வைக்க முடியும்.

பொதுவாக சிம்கார்டு களுக்கு என சர்வதேச மொபைல் குறியீடு (MCC) முறை பயன்படுத்தப்படுகிறது.

ICCID(integrated circuit card identifier) எனும் முறையை பயன்படுத்தி உலகளாவிய அளவில் சிம்கார்டுகள் கண்டறியப்படுகின்றன மற்றும் கவனிக்கப்படுகின்றன.

இதன் மூலமாக, போலியான சிம்கார்டுகளை உருவாக்குவது கடினமான ஒன்றுதான்.

மேலும், நமக்கு தொலைதொடர்பு சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட அலைவரிசையிலான தொலைத்தொடர்பு இணைப்புகள் முன்பே ஏலத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இதைக் கொண்டு அந்த நிறுவனங்கள் சிம் கார்டு எண்களை கொண்ட சிம்கார்டுகளை வெளியிடுகின்றன.

பொதுவாக, இத்தகைய தொலைதொடர்பு நிறுவனங்கள் carrier providers எனும் பெயரில் அறியப்படுகிறது.

அதேபோல, ஒவ்வொரு நாட்டுக்கும் என சிறப்பு குறியீட்டு எண்கள் வழங்கப்பட்டுள்ளன உதாரணமாக, இந்தியாவிற்கு +91 என்பதை குறியீட்டு எண்ணாக வழங்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து வரக்கூடிய மொபைல் எண் 6 முதல் 13 எண்கள் வரை இருக்கக்கூடியது.

இந்தியாவில் 10 எண்கள் கொண்ட முறையை பயன்படுத்தி வருகிறோம்..

சிம் கார்டுகள் ஒரு மொபைல் போனில் செறுகப்பட்டவுடன், அந்த மொபைல் போனில் உள்ள ஐ எம் இ ஐ  தரவுகளை தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு அனுப்புகிறது.

தொலைத் தொடர்பு நிறுவனம் சரி பார்த்து மொபைல் எண்ணில் சிம் கார்டுக்கான இணைப்பு அனுமதி வழங்குகிறது.

அதேபோல, தொலை தொடர்பு நிறுவனங்கள் இந்த தரவுகளைக் கொண்டு ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கான சலுகைகளை ரத்து செய்கிறது.

அல்லது ஒரு குறிப்பிட்ட நாளுக்கான டேட்டா நிறைவடைந்த உடன் இணைப்பை துண்டிக்கிறது.

மேலும், உங்களுடைய சிம் கார்டில் இருந்து ஏதேனும் சட்ட விரோதமான செயல்பாடுகள் நடைபெறும் பட்சத்தில் அந்த இணைப்பை அரசாங்கமும் தொலைதொடர்பு நிறுவனமும் தடை செய்கின்றன.

பொதுவாக, சிம்கார்டுகள் 128bit பாதுகாப்பு அம்சங்களோடு தான் வருகின்றன.

இருந்த போதிலும் சில திறன்மிகு உளவு மென்பொருட்களை கொண்டு தொலைபேசி அழைப்புகளை ஒட்டு கேட்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஆனால், உங்களுடைய அழைப்புகள் ஒட்டுக்கேட்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இணைய தொடர்பு இல்லாத சாதாரண ஒரு மொபைல் போனை பயன்படுத்துங்கள்.

இணைய தொடர்பை கொண்ட ஸ்மார்ட் ஃபோன்களை ஒட்டு கேட்பதை காட்டிலும் இதிலிருந்து ஒட்டு கேட்பது சற்றே கடினமான ஒரு காரியம்தான்.

அதேநேரம், உங்களுடைய தரப்புகளை தவறாக பயன்படுத்தி போலியான சிம்கார்டுகளை பெற்று அதிலிருந்து குற்ற செயல்களை செய்வதும் கடந்த காலங்களில் அதிகமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

நீங்கள் இந்தியாவில் இருந்தாலும் சரி அல்லது வெளிநாட்டில் இருந்தாலும் சரி உங்களுடைய அரசாங்கத்திலிருந்து வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை தெரியாத நபர்களுக்கு அல்லது அங்கீகரிக்கப்படாத சிம்கார்டு விற்பனையாளரிடமும் வழங்க வேண்டாம்.

இவ்வாறு வழங்கும் பட்சத்தில் உங்களுடைய பெயரிலிருந்து சிம்கார்டுகளை பெற்று குற்ற செயல்கள் நடக்க வாய்ப்பு உள்ளது.

எலக்ட்ரானிக்ஸ் துறையில் தொலைத் தொடர்பை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றதில் சிம்கார்டுகளுக்கு ஒரு மிக முக்கிய பங்கு உள்ளது.

தற்காலத்தில், மென்பொருள் அடிப்படையிலான இ சிம்கள் மற்றும் மின்சுற்று அடிப்படையிலான ஐ சிம்கள் புழக்கத்தில் வர தொடங்கிவிட்டன.

பழமையான சிம்கார்டுகளை விடவும் இவற்றில் பாதுகாப்பு அதிகமாக இருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

எப்படியும் இன்னும் சில ஆண்டுகளில் நீங்கள் கைகளில் எடுத்து பார்த்துக் கொண்டிருக்கும் சிம் கார்டுகள் முற்றிலுமாக மறைந்து விடும்.

சிம் அட்டைகளுக்கு ரீசார்ஜ் செய்வதற்கு கடைகளில் பத்து ரூபாய் முதல் ரீசார்ஜ் கார்டுகள் கிடைத்து வந்தன.

அவற்றில் இருக்கக்கூடிய 16 இலக்கு எண்ணை உங்களுடைய தொலைபேசி வழங்குனரால் வழங்கப்பட்டுள்ள, சிறப்பு குறியீட்டோடு சேர்த்து தொடர்பு கொள்ளும்போது உங்களுடைய கணக்கில் அந்த ரீசார்ஜ் அட்டைக்கு உரிய தொகை ரீசார்ஜ் செய்யப்படும்.

அந்த 16 இலக்கு என்னை crack செய்வதற்காக நான் பலமுறை முயற்சி செய்து பார்த்திருக்கிறேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது,ஒரே ஒருமுறை மட்டும் 10 ரூபாய்க்கு நான் உள்ளிட்ட 16 இலக்கு எண்ணின் மூலமாக ரீசார்ஜ் செய்யப்பட்டது.

ஆனால், தற்பொழுது கிடந்த ஐந்தாண்டுகளில் இருக்கக்கூடிய சிம் கார்டுகளின் வளர்ச்சி அபரிவிதமானதாக இருக்கிறது.

வருங்காலத்தில் சிம் கார்டுகளின் புது வடிவம் எப்படி இருக்கும்? என்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் அனுமானங்கள் இருந்தால், என்னுடைய மின் மடலுக்கு மடல் இயற்றவும். உங்களுடைய கணிப்புகளையும் ஒரு கட்டுரையில் காணலாம்

மேற்படி இந்த கட்டுரை குறித்து உங்களுக்கு ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் தயங்காமல் என்னுடைய மின்மடல் முகவரிக்கு மடல் இயற்றவும்.

மீண்டும் ஒரு எலக்ட்ரானிக்ஸ் கட்டுரையில் உங்களை வந்து சந்திக்கிறேன்.

கட்டுரையாளர்:-

ஸ்ரீ காளீஸ்வரர் செ,

இளங்கலை இயற்பியல் மாணவர்,

(தென் திருவிதாங்கூர் இந்து கல்லூரி, நாகர்கோவில் – 02)

இளநிலை கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்,

கணியம் அறக்கட்டளை.

மின்மடல் முகவரி : srikaleeswarar@myyahoo.com

இணையம் : ssktamil.wordpress.com

https://kaniyam.com/sim-%e0%ae%85%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%b5%e0%af%87%e0%ae%b2%e0%af%88-%e0%ae%9a%e0%af%86/

#basicElectronics #dailyElectronics #electronics

Client Info

Server: https://mastodon.social
Version: 2025.07
Repository: https://github.com/cyevgeniy/lmst